• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானம்

இலங்கை

யாழ்ப்பாண மாவட்டத்தில் சகல பாடசாலை வளாகங்கள், வைத்தியசாலை வளாகங்கள், அரச நிறுவனங்கள் அமைந்துள்ள காணிகள், பல்கலைக்கழக வளாகங்கள், பல்கலைக்கழக விடுதிகள், அனைத்திலும் எதிர்வரும் 21ம் திகதி முழுநேர டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் சிவபாலசுந்தரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய்த்தாக்கம் மிக உச்சநிலையை அடைந்துள்ளது. நேற்றைய தினத்தில் மட்டும் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்ட 111 டெங்கு நோயாளிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, பருத்தித்துறை, சாவகச்சேரி, ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை மற்றும் தனியார் வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் யாழ் மாவட்டத்தில் இம்மாதம் 18ம் திகதி வரை 886 டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பூச்சியியல் ஆய்வுக்குழுவினர் யாழ் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவுகளில் மிக அதிகமான டெங்கு பரவல் இருப்பதாகவும் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்கள் பெருகிக் காணப்படுவதாகவும் அடையாளம் கண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவுகளில் காணப்படும் இந்நிலைமை ஏனைய பிரதேசங்களிற்கும் வியாபித்து யாழ் மாவட்டம் முழுவதும் டெங்கு தாக்கம் ஏறத்தாழ அபாயகரமான நிலைமையை எட்டியுள்ளது.

எனவே மேற்படி விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு அனைத்து அரசாங்க நிறுவனங்களும் பாடசாலைகள் மற்றும் பல்கலைகழக நிர்வாகங்களும் பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கிச் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் எனக் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply