• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முதல் நாள் படப்பிடிப்பு.. தடுமாறிய சிவாஜி ராவ்!.. 

சினிமா

அபூர்வ ராகங்கள் 
படத்தில் நடந்த சுவாரஸ்யங்கள்
சிவாஜி ராவ் திரைப்படக் கல்லூரி மாணவராக இருக்கும்போது கல்லூரிக்கு ஒருநாள் இயக்குனர் பாலச்சந்தர் வர, அவரிடம் சில நிமிங்கள் பேசும் வாய்ப்பு சிவாஜி ராவுக்கு கிடைத்தது. சிவாஜி ராவிடம் ஏதோ ஒன்று இருப்பதை உணர்ந்த பாலச்சந்தர் அப்போது அவர் இயக்கி வந்த அபூர்வ ராகங்கள் படத்தில் ஸ்ரீவித்யாவின் கணவராக நடிக்க வைத்தார். சிவாஜி ராவ் என்கிற பெயரை ரஜினிகாந்த் என மாற்றினார்.
கதைப்படி ஸ்ரீவித்யாவை விட்டு பிரிந்து சென்ற அவர் ஸ்ரீவித்யாவிடம் மன்னிப்பு கேட்பதற்காக புற்றுநோயுடன் திரும்பி வருவார். முதல் நாள் படப்பிடிப்பு. அதற்கு முந்தைய நாள் இரவு முழுவதும் சிவாஜி ராவ் தூங்கவே இல்லை. விடுதி அறையில் தன்னிடம் தங்கியிருந்தவரிடம் காலை 5 மணிக்கு என்னை அழைத்து செல்ல கார் வரும். 4 மணிக்கு என்னை எழுப்பி விடுங்கள் என சொல்லிவிட்டார்.
அவருக்கு தூக்கமே இல்லை. முதல்நாள் முதல் காட்சியில் பேச வேண்டிய ‘நான் பைரவியோட புருஷன்’ என்கிற வசனத்தை பலமுறை சொல்லிப்பார்த்துகொண்டே இருந்தார். எப்போது தூங்கினார் என அவருக்கே தெரியவில்லை. 4.30 மணிக்கு நண்பர்கள் எழுப்பிவிட குளித்துவிட்டு ரெடியாகி மொட்டை மாடியில் நின்றுகொண்டு கார் வருகிறா என்று பார்த்துகொண்டே இருந்தார் சிவாஜி ராவ். ஆனால், வரவில்லை.
சுமார் 6 மணிக்கு கார் வந்தது. வேகமாக கீழே இறங்கி அதில் ஏறிய கார் படப்பிடிப்பு தளத்திற்கு போனது. அங்கு வந்த கமலிடம் ‘ஐ யம் சிவாஜி ராவ் ஃபிரம் பெங்களூர். நீங்கள் நடித்த ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படம் பார்த்தேன் சிறப்பாக நடித்திருந்தீர்கள்’ என ஆங்கிலத்தில் சொன்னார் சிவாஜி ராவ். புன்னகையுடன் கடந்து சென்றார் கமல்ஹாசன். அதுதான் ரஜினி கமலிடம் முதல் முறையாக பேசியது.
இப்போது ரஜினிக்கு முதல் ஷாட். ‘நான் பைரவியோட புருஷன்’ என வசனம் பேச வேண்டும். ஆனால், ரஜினிக்கு வரவில்லை. அருகில் இருந்த நாகேஷோ அவரை நடிக்க விடாமல் கலாய்த்துக்கொண்டே இருந்தார். நாகேஷை சும்மா இருக்கும்படி அடக்கிவிட்டு ரஜினியை நடிக்க வைத்தார் பாலச்சந்தர். ரஜினிக்கு கூட்டத்தை பார்த்து எந்த பயமோ, பதட்டமோ இல்லை. பாலச்சந்தை பார்த்துதான் அவருக்கு பயம். ஒருவழியாக நடித்தார்.

அதன்பின் படம் முடிந்து டப்பிங் வேலை நடந்தது. தனக்கு வேறு நடிகர் குரல் கொடுப்பார் என ரஜினி நினைத்த நிலையில் ரஜினியே பேசட்டும் என பாலச்சந்தர் சொல்லிவிட்டார். எடிட்டிங் அறையில் தன்னை முதன் முதலாக திரையில் பார்க்கிறார் சிவாஜி ராவ். இதற்குத்தானே தவம் கிடந்தார். ஆனால், பாலச்சந்தர் அங்கே இருந்ததால் டப்பிங் பேசவரவில்லை‌.
அவரின் உதவியாளர்களிடம் ‘அவர் இருந்தால் எனக்கு பேசவரவில்லை’ என சொல்ல பாலச்சந்தர் அங்கிருந்து சென்றுவிட்டார். அதன்பின் தான் நடித்த காட்சிகள் முழுவதுக்கும் டப்பிங் பேசி முடித்தார் சிவாஜி ராவ். அதன்பின் அவர்கள், மூன்று முடிச்சி என தொடர்ந்து சிவாஜி ராவை நடிக்க வைத்தார் பாலச்சந்தர். இப்படித்தான் ரஜினி என்கிற நடிகர் உருவானார்.
முதல்நாள் ரஜினியை கிண்டலடித்த நாகேஷ் அதன்பின் ரஜினிக்கு சொல்லி கொடுத்தார். பாலு என்ன சொல்கிறானோ, அவர் எப்படி நடித்து காட்டுகிறானோ.. அதை அப்படியே உள்வாங்கி செய்துவிடு. அதைத்தான் நான் செய்து வருகிறேன்’ என சொன்னார். ஆனால், ரஜினியோ பாலச்சந்தர் சொல்வதுடன் தனது ஸ்டைலையும் கலந்து பேசி பெரிய நடிகராக வளர்ந்துதான் வரலாறு.
பதிவு: சினிரிப்போர்ட்!

Leave a Reply