• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைப் பூர்வீகமாக கொண்ட வினு சக்கரவர்த்தி

சினிமா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைப் பூர்வீகமாக கொண்ட வினு சக்கரவர்த்தி அவர்கள் ஆரம்பத்தில் புகழ்பெற்ற கன்னடத் திரைப்பட இயக்குனர் புட்டண்ணா கனகல் அவர்களிடம் உதவியாளராகப் பணியாற்றினார் தன்னுடைய பள்ளி படிப்பை சென்னையில் முடித்து காவல் துறையில் சேர்ந்துள்ளார். பின்னர் தெற்கு ரயில்வேயில் உயர் அதிகாரியாக பொறுப்பேற்று சில காலங்கள் பணிபுரிந்து பின்னர் சினிமாவில் உள்ள மோகத்தின் காரணமாக அந்த வேலையே ராஜினாமா செய்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

விவேகானந்தா பிக்சர்ஸ் உரிமையாளர் திருப்பூர் மணி அவர்கள் தயாரித்த, 1979 ஆம் ஆண்டு சிவக்குமார், தீபா நடித்த “ரோசாப்பூ ரவிக்கைக்காரி” திரைப்படத்தில் ஒரு கிராமத்தானாக சிறிய வேடத்தில் தோன்றினார். டைட்டிலில் அறிமுகம் வினு என்று தான் இடம்பெற்றிருக்கும். கதை, திரைக்கதை, வசனம் எழுதுவதில் இயக்குனர் புட்டண்ணா கனகல் அவர்களிடம் பணியாற்றிய அனுபவம், வினு சக்கரவர்த்தி அவர்களுக்கு கதை எழுதும் ஆர்வம் வந்தது.

புட்டண்ணா கனகல் இவருக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான பாரதிராஜாவுக்கு குருவாக இருந்தவர். 1976 ஆம் ஆண்டு வினு சக்கரவர்த்தி அவர்கள் கதை, வசனம் எழுதியது தான் “வண்டிச்சக்கரம்”. இதன் தயாரிப்பு பணிகள் ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979) திரைப்படம் வெளிவந்த பின் ஆரம்பிகப்பட்டு 1980 ஆம் ஆண்டில் வெளியானது. தயாரித்தவர் விவேகானந்தா பிக்சர்ஸ் – திருப்பூர் மணி அவர்கள். இயக்கியவர் கே.விஜயன் அவர்கள். முதல் முதலாக வினு சக்கரவர்த்தி அவர்கள் கதை வசனம் எழுதிய படம் இதுதான்.

பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் ஹிந்தி என பல மொழிகளில் 1000திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி இருக்கிறார் நடிகர் வினுசக்கரவர்த்தி. இப்படத்தின் மூலம் “சில்க் ஸ்மிதா” வை அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். சில்க் ஸ்மிதாவை சினிமாவிற்குள் கொண்டு வந்த அனுபவத்தை வினுசக்கரவர்த்தி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

அதில் அவர் கூறியது, என்னுடைய படத்தயாரிப்பாளர் ஒரு பாடலுக்கு கவர்ச்சியான நடிகை வேண்டும் என்று பல நடிகைகளின் பெயர்களை சொல்லியிருந்தார். ஆனால், எனக்கு அதில் எந்த ஒரு ஈடுபாடும் இல்லை. புதிதாக ஒரு நடிகையை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்கு இருந்தது. அப்போது ஒரு நாள் மாவரைக்கும் மிஷின் பக்கத்தில் ஒரு பெண்ணை பார்த்தேன். அவர் சட்டென்று திரும்பிப் பார்க்கும்போது அவருடைய கண் காந்தம் போல் என்னை ஈர்த்தது.

அப்போது அவரிடம் பேசினேன். அவர் என்னுடைய பெயர் விஜய மாலா, ஆந்திராவை சேர்ந்தவர். இங்கு தமிழ்நாட்டிற்கு வந்து 17 நாட்கள் ஆகிறது என்று சொன்னார். உடனே நான் நடிக்கிறியா? என்று கேட்டேன். அதற்கு அவர் நான் எங்கள் ஊரில் திருவிழாக்களில் நடனம் ஆடியிருக்கிறேன். எனக்கு நடனம் ஆடனும் ஆசை இருக்கு என்று சொன்னார். பின் அவருக்கு எப்படிப் பேசுவது? எப்படி நடிப்பது? என்று ஒவ்வொன்றையும் கற்று கொடுத்தேன். சில்க்ஸ்மிதாவும் 12 நாட்களில் எல்லாமே கற்று கொண்டார். அப்படிதான் சில்க் ஸ்மிதாவை உருவாக்கினேன்.

பின் நான் சில்க் ஸ்மிதாவை கொண்டுபோய் இயக்குனர்களிடம், தயாரிப்பாளாரிடம் காண்பித்தவுடன் அவர்கள் எங்கிருந்து பிடித்து கொண்டு வந்தாய். ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் இவர் கலக்கப் போகிறார் என்று கூறினார்கள். அதே போல் அவரும் கலக்கினார் என்று கூறியிருந்தார். அதே போல சில்க் ஸ்மிதா தாய் தந்தை இல்லாமல் கேட்பார் இல்லாமல் இருந்ததால் தான் அவர் அப்படி ஆனார் என்றும் கூறி இருந்தார்.

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த, பிரபு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு நெருக்கமாகவும் பிடித்த நடிகராகவும் இருந்துள்ளார். ஆனால் பல சினிமாக்களில் நடித்திருந்தாலும் எப்படியாவது ஒரு படத்தை இயக்கி விட வேண்டும் என்ற ஆசை இவருக்கு இருந்திருக்கிறது. ஆனால் அது கடைசி வரை நிறைவேறாமலே சென்று விட்டது இதுதான் அவரின் நிறைவேறாத ஆசை என்று அவரது மனைவி சித்ரா லட்சிமி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

ஆறுமுகம் தாரமங்கலம் சேலம்

Leave a Reply