• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உக்ரைனில் எத்தனை ரஷ்ய வீரர்கள் உள்ளனர் - புடின் வெளியிட்ட தகவல்

இலக்கை அடையும் வரை உக்ரைனில் அமைதி திரும்பாது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி தொடங்கி இன்னும் சில மாதங்களில் 2 ஆண்டை நிறைவு செய்ய உள்ளது.
  
இந்த போர் நடவடிக்கையில் உக்ரைனுக்கு ஆதரவாக பல்வேறு மேற்கத்திய நாடுகளும் ராணுவ மற்றும் நிதி உதவியை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

இவற்றில் அமெரிக்கா மட்டும் இதுவரை 111 பில்லியன் அமெரிக்க டொலரை( அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 9 லட்சத்து 25 ஆயிரத்து 617 கோடியாகும்) உக்ரைனுக்கு நிதி உதவி செய்துள்ளது.

ரஷ்ய வீரர்களை நாட்டை விட்டு முழுவதுமாக வெளியேற்ற உக்ரைனிய ராணுவ படைகளும், நாட்டை முழுவதும் கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கில் ரஷ்ய வீரர்களும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைனில் ஏற்கனவே 6 லட்சத்து 17 ஆயிரம் வீரர்கள் முகாமிட்டுள்ளனர். எனவே கூடுதல் வீரர்களை அணி திரட்டுவதற்கான அவசியம் ரஷ்யாவுக்கு இல்லை.

மேலும் இந்த போர் நடவடிக்கையின் நோக்கம் நிறைவேறும் வரை உக்ரைனில் அமைதி திரும்பாது என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

விளாடிமிர் புடின் கடந்த 24 ஆண்டுகளாக ரஷ்யாவின் ஜனாதிபதியாக இருந்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply