• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உதவி ஒளிப்பதிவாளராக இருந்தவர் திடீரென நடிகையான அதிசயம்..நெஞ்சத்தை கிள்ளாதே வெற்றிக்கதை....

சினிமா

இயக்குனர் மகேந்திரன், ரஜினிகாந்தின் ‘ஜானி’ என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது அடுத்ததாக ஒரு புதிய படத்தை தேவி பிலிம்ஸ் என்ற நிறுவனத்திற்காக இயக்க ஒப்பந்தமானார். அந்த படத்தில் நாயகன், நாயகி இருவருமே அறிமுக நட்சத்திரங்களாக இருக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.

இந்த படத்திற்காக அவர் தனது உதவியாளர்களுடன் நாயகன், நாயகியை தேடிக்கொண்டிருந்த போதுதான் ‘ஜானி’ படபிடிப்பிலேயே அவருக்கு நாயகி கிடைத்துவிட்டார். அவர்தான் சுகாசினி.

ஜானி படத்தின் படப்பிடிப்பின்போது அந்த படத்தின் ஒளிப்பதிவாளருக்கு உதவி ஒளிப்பதிவாளராக பணி செய்துக் கொண்டிருந்த சுகாசினி ஒரு காட்சி முடிவடைந்ததும் அடுத்த காட்சிக்காக லைட்டிங் செய்து கொண்டிருந்தபோது தான் தற்செயலாக சுகாசினியை கவனித்தார் மகேந்திரன்.

தன்னுடைய அடுத்த படத்தின் கேரக்டருக்கு இவர் நிச்சயம் சரியாக வருவார் என்பதை முடிவு செய்தார். உடனே அவரை அழைத்து என்னுடைய அடுத்த படத்திற்கு நீங்கள் தான் நாயகி, நடிக்கிறீர்களா? என்று கேட்டபோது தனக்கு நடிப்பில் விருப்பமில்லை என்றும் அதனால் என்னை விட்டு விடுங்கள் என்றும் கூறினார்.

மகேந்திரன் இயக்கத்தில் உருவான ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படத்தில் சாருஹாசன் நடித்திருந்ததால், அவருடன் நல்ல பழக்கம் இருந்தது. இதனையடுத்து அவர் சாருஹாசனிடம் தனது விருப்பத்தை கூறினார். சாருஹாசனும் சுகாசினியுடன் பேசி, ‘மகேந்திரன் நல்ல டைரக்டர், நிச்சயமாக அவர் உன்னை நன்றாக திரையில் காண்பிப்பார்’ என்று உத்தரவாதம் தந்தார்.

தந்தையின் சொல்லை மறுக்க முடியாத சுகாசினி, ‘இந்த ஒரு படத்தில் மட்டும் நடிக்கிறேன், நடிப்பு வருகிறதா என்று பார்க்கிறேன், என்னை கட்டாயப்படுத்த கூடாது, இந்த படத்தில் நடித்து முடித்தவுடன் எனக்கு விருப்பம் இருந்தால்தான் அடுத்தடுத்து படங்களில் நடிப்பேன்’ என்று நிபந்தனைப் போட்டு நடித்தார். அந்தப் படம்தான் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’.

முதல் நாள் படப்பிடிப்பிலேயே சுகாசினியின் நடிப்பை புரிந்து கொண்ட மகேந்திரன் நிச்சயம் நீங்கள் மிகப்பெரிய நாயகியாக தமிழ் சினிமாவில் வருவீர்கள் என்று கூறினார். இந்த படத்தில் நடிகர் மோகன்  கதாநாயகன். பிரதாப் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த படத்தை தான் நினைத்தது போலவே முழு திருப்தியுடன் மகேந்திரன் முடித்தார். 1980ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி இந்த படம் வெளியானது. இசைஞானி இளையராஜா இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். ‘பருவமே’ என்ற பாடல் இன்றளவும் பிரபலமாக இருக்கிறது.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்த படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு ஊடகங்கள் பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்ததை அடுத்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது.

இந்த படம் சிறந்த தமிழ் படம், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த ஆடியோகிராபி என்ற மூன்று தேசிய விருதுகளை பெற்றது. மேலும், சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற மூன்று தமிழக அரசின் விருதுகளையும் பெற்றது.

இந்த விருதுதான் சுகாசினியை அடுத்தடுத்து படங்களில் நடிக்க உத்வேகம் கொடுத்தது. தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல நடிகை கிடைத்ததற்கு காரணமாக ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ படம் அமைந்தது.

Paravasam Nayagan
 

Leave a Reply