• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போர் பின்னணியில் பாதுகாப்பு கவுன்சில் தலைமையை ஏற்ற சீனா

உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது, ஐ.நா. சபையின் 6 அங்கங்களில் ஒன்றான யு.என்.எஸ்.சி. (UNSC) எனப்படும் பாதுகாப்பு கவுன்சில்.

1945 அக்டோபரில் உருவாக்கப்பட்ட இந்த கவுன்சிலின் மொத்த உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கை, 15. இதில் சீனா, பிரான்ஸ், ரஷியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள்.

பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பதவி, அதன் உறுப்பு நாடுகளால் சுழற்சி முறையில் மாதம் ஒரு நாட்டிற்கு வழங்கப்படும்.

இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்து பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் போர் புரிந்து வரும் இஸ்ரேல், உலக நாடுகளின் போர் நிறுத்த கோரிக்கையை புறக்கணித்து, தாக்குதலை மேலும் கடுமையாக்கியுள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பதவியை சீனா ஏற்று கொண்டது.

தற்போது தீவிரமடைந்துள்ள இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில் உலகளாவிய அமைதிக்கு சீனாவின் தலைமை பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

"தனது கடமையை பாதுகாப்பு கவுன்சில் செய்ய சீனா ஊக்குவிக்கும். ஒருமித்த கருத்தை உலக நாடுகளிடையே உருவாக்கவும், பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்தில்லாத நிலையை கொண்டு வரவும் சீனா அனைத்து வகையிலும் முன் நிற்கும்" என இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில் தலைமை பதவி குறித்து சீனாவின் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் வேங் வென்பின் (Wang Wenbin) தெரிவித்தார்.

கடைசியாக 2022 ஆகஸ்ட் மாதம் சீனா இந்த தலைமை பொறுப்பை வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply