• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜூனியர் பாலையா மரணம்- கமல்ஹாசன் இரங்கல்

சினிமா

எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்டோரோடு நடித்த பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையா. தனது கணீர் குரலாலும் நடிப்புத் திறமையாலும் மக்கள் மத்தியில் புகழ்பெற்ற இவரது மகன் ஜூனியர் பாலையா. 70 வயதான இவர் 1975-ம் ஆண்டு வெளியான மேல் நாட்டு மருமகள் என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதன் பிறகு சினிமா, தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்ற ஜூனியர் பாலையா வயது மூப்பு காரணமாக இன்று காலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தார். சென்னை வளசரவாக்கத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த ஜூனியர் பாலையா கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பு காரணமாக வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார்.

இதையடுத்து இன்று அவரது உயிர் பிரிந்துள்ளது. கோபுரவாசலிலே, கரகாட்டக்காரன், சின்னத்தம்பி, சாட்டை, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான ஜூனியர் பாலையா சித்தி, சின்னபாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

சாட்டை திரைப்படத்தில் தலைமை ஆசிரியர் வேடத்தில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். கும்கி, தனி ஒருவன், புலி உள்ளிட்ட படங்களிலும் இவரது நடிப்பு பாராட்டை பெற்றிருந்தது. ஜூனியர் பாலையாவின் இயற்பெயர் ரகுபாலையா. இவரது தந்தை டி.எஸ்.பாலையாவின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் அருகே உள்ள சுண்டன்கோட்டை ஆகும்.

டி.எஸ்.பாலையா சினிமாவில் கொடிகட்டி பறந்து சென்னையிலேயே குடியேறிவிட்டதால் ஜூனியர் பாலையா சென்னையிலேயே பிறந்து வளர்ந்தார். தந்தையை போன்றே இவருக்கும் 'கணீர்' குரல்தான். உருவ தோற்றமும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருக்கும்.

50 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடித்து வந்த ஜூனியர் பாலையா, 287 படங்களில் நடித்திருக்கிறார். இவரது மனைவி பார்வதி, மகள் நிவேதிதா, மகன் ரோகித் பாலையா. இவரும் சினிமாவில் நடித்து வருகிறார். ஜூனியர் பாலையா கடைசியாக நடித்த படம் 'என்னங்கடா உங்க சட்டம்'. ஜூனியர் பாலையாவின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையா அவர்களின் மகனான ஜூனியர் பாலையா ரகு, எனக்கு பதின்பருவ நண்பராக அமைந்தார். தந்தையைப் போலவே நாடக மேடைகளில் தன் கலையைத் தொடங்கி திரையில் வலம் வந்தவர் இன்று மறைந்து விட்டார். அவருக்கு என் அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கு என் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply