• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டில் தேரர்களுக்கு மட்டும் தனிச் சட்டமா? – மனோ கணேசன்

இலங்கை

அம்பிட்டிய சுமனரத்தின தேரரை ஐ.சி.சி.பி ஆர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள விசேட கொணொலிப் பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுமனரத்தின தேரரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அவருக்கு முதலில் என்ன பிரச்சினை என்பதைக் கண்டறிய வேண்டும். மனநோயாளி போல் தமிழர்களை வெட்டுவேன் என பகிரங்கமாகக் கூறுகின்றார்.

விசேடமாகப் பௌத்தர்கள் புனித போயா தினத்தினை அனுஷ்டிக்கும் இந்த வேளையில் அவர் அவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

குறிப்பாக அவர் தெரிவிக்கும் அந்த மயான பூமி தொடர்பாக அவர் சம்பந்தப்பட்ட துறையினரிடமோ அல்லது பொலிஸாரிடமோ முறையிட்டு இருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை.

நடைமுறையிலுள்ள ஐ.சி.சி.பி ஆர் சட்டத்தின் கீழ் உடனடியாக அந்த தேரர் கைது செய்யப்பட வேண்டும். ஏனெனில் குறித்த சட்டத்தின் கீழ் ஏற்கனவே சில மதத் தலைவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் இருக்கின்றன.

அவ்வாறு அம்பிட்டிய சுமனரத்தின தேரரை கைது செய்யாவிட்டால் அவர் மீண்டும் மீண்டும் அவ்வாறு தான் நடந்து கொள்வார்.

இதற்கு உடனடியாகவே நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply