• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பழைய நினைவுகளை பகிர்ந்த ரஜினிகாந்த்

சினிமா

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பணகுடியில் கடந்த 10-ந்தேதி தொடங்கியது.

இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வந்த நடிகர் ரஜினிகாந்த், அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்கி உள்ளார். கடந்த 3 நாட்களாக படப்படிப்புக்காக காரில் பணகுடிக்கு வரும் நடிகர் ரஜினியை காண அவரது ரசிகர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்களிடையே கை அசைத்தபடியும், கை குலுக்கியபடியும் நடிகர் ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று 4-வது நாள் படப்படிப்பு நடக்கிறது. 3 நாட்கள் மட்டுமே அங்குள்ள தள ஓடு தொழிற்சாலையில் சண்டை காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், கூடுதல் காட்சிகளுக்காக இன்று மேலும் ஒருநாள் படப்பிடிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே படப்பிடிப்பில் பங்கேற்க வந்த நடிகர் ரஜினிக்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் ரசிகர்கள் மத்தியில் பேசிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ரஜினிகாந்த், "46 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லைக்கு வருகை தந்துள்ளேன். கடைசியாக 1977-ம் ஆண்டு புவனா ஒரு கேள்விக்குறி என்ற படத்துக்கு வந்தது" என அவர் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர் அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா, மஞ்சு வாரியர் ஆகியோர் நடிக்கின்றனர். ஞானவேல் இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 
 

Leave a Reply