• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடா நாட்டினருக்கு விசா இல்லை: இந்தியா தற்காலிகமாக நிறுத்தம்

கனடா

புதுடெல்லி: கனடா நாட்டினருக்கான விசா சேவையை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருப்பதாக அறிவித்துள்ளது.

கனடாவில் செயல்படும் இந்திய தூதரக ஊழியர்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு உள்ள நிலையில், அவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

கனடாவில் சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசாங்கத்திற்குத் தொடர்பு இருப்பதாக கனடா அரசு பகிரங்கமாக அண்மையில் குற்றம் சாட்டியது.

இதற்கு இந்திய அரசாங்கம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததுடன், கனடாவுக்குச் செல்லும் இந்தியர்களும் அங்கு வாழும் இந்தியர்களும் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்துகொள்ள வேண்டும் என்று அண்மையில் கோரிக்கை விடுத்தது.

ஆனால் இந்தியாவின் இந்தப் புகாருக்கு மறுப்பு தெரிவித்த கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர், கனடா ஒரு பாதுகாப்பான நாடு என்று தெரிவித்தார்.

இந்நிலையில் கனடா நாட்டு மக்களுக்கான விசா சேவையை இந்தியா தற்காலிகமாக அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

இருநாடுகளுக்கு இடையே அரசதந்திர மோதல் அதிகரித்து வரும் நிலையில் செயல்பாட்டு காரணங்களுக்காக விசா சேவை நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சமூக ஊடகத்தில் மிரட்டல்கள் வந்ததை அடுத்து தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவில் தற்காலிக ஏற்பாடுகளைச் செய்வதாக கனடா தெரிவித்தது.

இந்தியாவுக்கு எதிராக கனடா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

கனடாவின் கடுமையான குற்றச்சாட்டு குறித்து அந்த நாட்டுடன் தொடர்பில் இருப்பதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

கனடா அதிகாரிகள் தொடர்ந்து புலனாய்வு செய்து வருவதால் இதுபற்றி மேலும் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது என்று பிரிட்டன் அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், கடந்த ஜூன் 18ஆம் தேதியன்று சீக்கிய குருத்வாராவுக்கு வெளியே நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவரது மரணத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையே ஒரு நம்பகமான தொடர்பு இருப்பதை கனடா உளவுத்துறை கண்டுபிடித்துள்ளதாக டுரூடோ கூறி இருந்தார்.

அந்த விவகாரம் பற்றி கனடா ஏற்கெனவே ஐந்து நாட்டு வேவு கண்காணிப்பு அமைப்புடன் விவாதித்து இருந்தது. அந்த நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவையும் அடங்கும்.

ஆனாலும் அந்த நாடுகளிடம் இருந்து எதிர்பார்த்த அளவுக்கு கனடாவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்று தெரிகிறது.

புதுடெல்லியில் அண்மையில் நடந்த ஜி20 உச்சநிலை மாநாட்டின்போது இந்தியாவைக் கண்டித்து கூட்டறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று கனடா பிரதமர் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் ஆனால், அதை அமெரிக்காவும் இதர நாடுகளும் நிராகரித்துவிட்டதாகவும் வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்தது. 
 

Leave a Reply