• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலக வங்கியின் தலைவர் ஜனாதிபதி ரணிலைச் சந்தித்தார்

இலங்கை

உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உலக வங்கி வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலக வங்கியின் தலைவருக்கு இதன்போது நன்றி தெரிவித்தார்.

இலங்கை முழுமையான பொருளாதார மறுசீரமைப்புப் பாதையில் பிரவேசித்துள்ளதாக சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் கடன் நீடிப்பு வேலைத்திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்புக்களை முழுமையாக அமுல்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்ட உலக வங்கியின் தலைவர், சுற்றுலாத்துறைக்கு முன்னுரிம அளித்து பொருளாதாரச் மறுசீரமைப்புக்காக மேற்கொண்டுள்ள அணுகுமுறையானது சாதகமானது என்று குறிப்பிட்டார்.

தற்போதைய நிலைமையில் இலங்கைக்கு அதுவே மிகவும் பொருத்தமானது என்றும் அவர் தெரிவித்தார்.

உலக கப்பல் பாதையின் மத்தியஸ்தானமாக விளங்கும் இலங்கையின் புவியியல் அமைவிடம் தனித்துவமானது எனத் தெரிவித்த உலக வங்கியின் தலைவர், அதனால் பொருளாதார அனுகூலங்களைப் பெறுவதற்கு துறைமுக வர்த்தகம் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply