• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடா தெருக்களில் திரண்ட புலம்பெயர்ந்தோர்

கனடா

கனடாவின் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டம், மீண்டும் அடிமை வாழ்வை உருவாக்க வழிவகை செய்யும் திட்டமாக அமைந்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், கனடா முழுவதும் நேற்று சாலைகளில் புலம்பெயர்வோர், அகதிகள், மாணவர்கள், ஆவணங்களற்றோர் உட்பட ஏராளமானோர் திரண்டதால், பொலிசார் போக்குவரத்து எச்சரிக்கைகள் விடுக்கும் நிலை உருவானது.  

கனடாவின் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் திட்டத்தை ஐ.நா அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது. சமகால அடிமைகளை உருவாக்கும் திட்டம்தான் இந்த தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்கள் திட்டம் என்று கூறியுள்ளது ஐ.நா அமைப்பு.

அத்துடன், ஐ.நாவின் சிறப்பு அறிவிப்பாளரான Tomoya Obokata என்பவர், அனைத்து தற்காலிகப் பணியாளர்களுக்கும் நீண்ட கால அல்லது நிரந்தர குடியிருப்பு அனுமதியளிக்கும் வகையில் வழிமுறை ஒன்றை வழங்குமாறு கனடா பெடரல் அரசை கோரியுள்ளார்.

நாங்கள் ஆண்டுதோறும் இத்தனை ஆயிரம் புலம்பெயர்ந்தோரை, மாணவர்களை கனடாவுக்கு வரவேற்கிறோம், வெளிநாட்டவர்களுக்கான இத்தனை திட்டங்களை அறிமுகம் செய்துள்ளோம் என்றெல்லாம் பெருமை பேசிக்கொண்டே இருக்கிறது கனடா.

ஆனால், நடைமுறையில், கனடாவுக்கு வெளிநாட்டவர்களை வரவேற்கும் கனடாவின் திட்டங்கள் பெரும்பாலானவற்றின் பின்னணியில் சர்ச்சைகுரிய விடயங்கள் இருப்பதை கவனிக்க முடிகிறது.

ஒரு பக்கம் கனடா வெளிநாட்டவர்களை வரவேற்க, மறுபக்கமோ, வீட்டு வாடகை, விலைவாசி போன்ற பிரச்சினைகளால், வந்தவர்கள் அமைதியாக சொந்த நாட்டுக்கே திரும்பிச் செல்லும் அவல நிலை குறித்த செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.

சர்வதேச மாணவர்களை வரவேற்பதாக ஒரு பக்கம் கனடா கூற, அவர்களில் பலர் தங்க இடமில்லாமல் அவதியுறுவதைக் குறித்தும், இவர்களை வைத்து லாபம் பார்க்கும் வகையில் வீட்டு உரிமையாளர்கள் வீட்டு வாடகைகளை உயர்த்தியது குறித்த செய்திகளும் வெளியாகின.

அவ்வகையில், அடுத்தபடியாக கனடாவின் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டம் குறித்த சில கவலையளிக்கும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆக மொத்தத்தில், இந்த திட்டங்கள் எல்லாமே கனடாவுக்கு நன்மை ஏற்படுத்தும் வகையில்தான் அமைந்துள்ளன எனலாம்.

கனடாவுக்கு, பழங்கள் பழுக்கும் காலத்தில் பழங்களைப் பறிப்பது போன்ற பருவகாலப் பணிகளைச் செய்ய ஆட்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், ஏதோ வெளிநாட்டவர்களுக்கெல்லாம் உதவி செய்வதுபோல, தாங்கள் அவர்களுக்கென திட்டங்கள் உருவாக்கியுள்ளதாக கூறுகிறது கனடா.

கனடா கூறுவதில் முழுமையாக உண்மை இல்லை என நிரூபித்துள்ளது, நேற்று கனடா முழுவதும் கவனம் ஈர்த்த ஒரு விடயம்.

ஆம், கனடா முழுவதும் நேற்று, புலம்பெயர்தோர், ஆவணங்களற்றோர், மாணவர்கள் மற்றும் அகதிகள் தெருக்களில் திரண்டு பேரணிகள் நடத்தினர்.

இன்று பெடரல் நாடாளுமன்றம் மீண்டும் கூட உள்ள நிலையில், நேற்று சாலைகளில் திரண்ட புலம்பெயர்தோர், ஆவணங்களற்றோர், மாணவர்கள் மற்றும் அகதிகள் முதலானோர், தங்கள் அனைவருக்கும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதியளிக்க கோரி பேரணிகள் நடத்தினர். பொலிசார் போக்குவரத்து மாற்றங்களை அறிவிக்கும் அளவுக்கு அந்த பேரணிகள் அமைந்திருந்தன.

கனடாவில், 1.7 மில்லியன் பேர் தற்காலிக பணி அல்லது கல்வி உரிமங்களுடன் தங்கியுள்ளார்கள். கனடா மக்களுக்கான உணவை உற்பத்தி செய்தல், கனேடியர்களின் குழந்தைகளை கவனித்துக்கொள்ளுதல், அத்தியாவசிய பணிகளை முன்னணியில் நின்று செய்தல் ஆகியவற்றை இந்த தற்காலிகப் பணியாளர்கள் செய்யும் நிலையில், அவர்களுக்கான சம உரிமைகளும் பாதுகாப்பும் மறுக்கப்படுவது, வேதனையை அளிப்பதாக உள்ளது என்கிறார், Migrant Workers Alliance for Change என்னும் அமைப்பின் அமைப்பாளர்களில் ஒருவரான Sarom Rho. 

Leave a Reply