• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிள்ளையானைப் பதவியில் இருந்து இடை நிறுத்த‌ வேண்டும்

இலங்கை

”‘பிள்ளையான்‘ என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் நாடாளும‌ன்ற‌ உறுப்புரிமையை இடைநிறுத்த வேண்டும்”  என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி (உல‌மா க‌ட்சி) சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ள‌து.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் பிள்ளையான் இருப்பதாக  ‘செனல் 4‘  ஊடகம்  அண்மையில் வெளியிட்ட காணொளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த  நிலையிலேயே ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சபாநாயகருக்கு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது” ஈஸ்ட‌ர் தாக்குத‌ல் தொடர்பாக  பிள்ளையானின் செய‌லாள‌ராக‌ இருந்த‌ ஆசாத் மௌலானாவினால் கூறப்பட்ட விட‌ய‌ங்க‌ளை யாரும் இல‌குவில் த‌ட்டிக்க‌ழிக்க‌ முடியாது.

அத்துட‌ன் ஈஸ்ட‌ர் தாக்குத‌லுக்கு ஐ.எஸ்  பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ள‌து என்ற‌ பிள்ளையானின் க‌ருத்தும் விசாரிக்க‌ப்ப‌ட்டு நிரூபிக்க‌ப்ப‌ட‌  வேண்டும்.

குண்டுத்தாக்குத‌ல் இட‌ம் பெற்ற‌ போது இத‌ற்கு ஐ.எஸ் பொறுப்பேற்ற‌தாக‌  இந்திய‌ இல‌ங்கை ஊட‌க‌ங்க‌ள் கூறின‌. இத‌ற்காக‌ ஐ.எஸ் த‌லைவ‌ர் ப‌க்தாதியின் வீடியோ உரை ஒன்றை வெளியிட்ட‌ன‌ர். அதில் அவ‌ர் அர‌பு மொழியில் தெளிவ‌ற்ற‌ முறையில்  ஏதோ பேச‌ ஆங்கில‌த்தில் பின்ன‌ணியில் ஐ.எஸ் உரிமை கோருவ‌தாக‌ கூற‌ப்ப‌ட்ட‌து. அந்த‌ வீடியோவில் ஐ எஸ் த‌லைவ‌ர் அவ்வாறு கூறினாரா அல்ல‌து அது போலியான‌தா என்ப‌தும் விசாரிக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

அத்துடன் இது வேண்டுமென்றே ஐ எஸ் ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் மீது ப‌ழி போட்டு த‌ப்பிக்கொள்ளும் முய‌ற்சியா என்ப‌தும் குறித்தும் விசாரிக்க‌ப்ப‌ட‌ வேண்டும். அவ்வாறு ஐ எஸ் பின்ன‌ணி இருந்திருந்தால் இது ப‌ற்றிய‌ அவ‌ர்க‌ளின் அர‌பு மொழியிலான‌ அறிக்கையை வெளியிடும்ப‌டி பிள்ளையானை கோருவ‌தும் ச‌பாநாய‌க‌ரின் பொறுப்பாகும்.

ஈஸ்ட‌ர் தாக்குத‌ல்க‌ள் என்ப‌ன‌ த‌ற்கொலை தாக்குத‌ல்க‌ளா அல்ல‌து அவை ரிமோட் க‌ன்ட்ரோலால் இய‌க்க‌ப்ப‌ட்ட‌ தாக்குத‌ல்க‌ளா என்றும் விசாரிக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.   அப்பாவிக‌ள் மீது எதுவித‌ கார‌ண‌மும் இன்றி  தாக்குத‌ல் மேற்கொள்வ‌து இஸ்லாம் மார்க்க‌த்தில் த‌டுக்க‌ப்ப‌ட்ட‌ ஒன்று என்ப‌தை சாதார‌ண‌ முஸ்லிம்க‌ளும் அறிவ‌ர்.

தீவிர‌வாதிக‌ள் சில‌ர் 2017ஆம் ஆண்டு ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு சிறையில் இருந்த‌ போது அச்சிறையில் இருந்த‌ அவ‌ர்க‌ளுட‌ன் அறிமுக‌மான‌ பிள்ளையான் அவ‌ர்க‌ள் ப‌ற்றி ஆசாத் மௌலானாவிட‌ம் தெரிவித்தார் என்றும் அவ‌ர்க‌ள் சிறையிலிருந்து வ‌ந்த‌ பின் பிள்ளையானின் அறிவுறுத்த‌லுக்கிண‌ங்க‌ அவ‌ர்க‌ளை, தான் தொட‌ர்பு கொண்டு ஏனைய‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளுக்கு ஒத்துழைத்த‌தாக‌ மௌலானா கூறியுள்ளார்.

இவ‌ர‌து கூற்றுக்க‌ளை வைத்து பார்க்கும் போது இத்தாக்குத‌ல்க‌ளின் பிர‌தான‌ மூளையாக‌ பிள்ளையானே செய‌ற்பட்டுள்ளார் என்பது போல் தெரிகின்றது.

ஆக‌வே பிள்ளையான் ஒரு நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் என்ப‌தால் ச‌பாநாய‌க‌ர் குழுவொன்றை நிய‌மித்து இது ப‌ற்றி விசாரிப்ப‌துட‌ன் விசார‌ணை முடியும் வ‌ரை பிள்ளையானின் நாடாளும‌ன்ற‌ ப‌த‌வியை இடை நிறுத்த‌ வேண்டும் என்றும் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி த‌ங்க‌ளிட‌ம் வின‌ய‌மாக‌க்  கோரிக்கை விடுத்துள்ளது” இவ்வாறு  குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a Reply