• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கு ஆதரவாக மன்னாரில் போராட்டம்

இலங்கை

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிக்கு ஆதரவாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் 2 ஆம் கட்ட பணிக்கு தொடர்ச்சியாக மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில், இன்றைய தினம் இத்திட்டத்திற்கு ஆதரவாக மன்னாரில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள நடுக்குடா கிராமத்தைச் சேர்ந்தவர்களினாலேயே இந்தப் போராட்டம், மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் சுமார் 40 பேர்வரை கலந்து கொண்டு, பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடுக்குடா, காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் 2 ஆம் கட்ட பணியை தாமதம் இன்றி முன்னெடுக்க வேண்டும் என்றும் அதனால் வேலை இல்லாத பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் இதில் கலந்து கொண்டிருந்தோரினால் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பொது அமைப்புக்கள் தமது இலாப நோக்கத்துக்காகவே இத்திட்டத்திற்கு எதிர்ப்பை முன்னெடுத்து வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்தப் போராட்டத்திற்கு மக்களை ஏமாற்றியே, ஏற்பாட்டாளர்கள் அழைத்து வந்துள்ளனர் என்று எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட வேலையற்றோர் சங்கம் என்ற ஒரு அமைப்பினாலேயே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த பெண் ஒருவர், குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டால் தங்களுக்கு காற்றாலை மின் உற்பத்தி திட்ட பணியில் வேலை பெற்று தருவதாக கூறியமைய காரணத்தினாலேயே இதில் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் 2ஆம் கட்ட பணிக்கு தொடர்ச்சியாக எதிர்ப்புக்கள் முன்னெடுக்கப்பபட்டு வருகின்ற நிலையில் ஒரு சிலர் தமது சுய இலாபத்திற்காக மக்களை ஏமாற்றி இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சமூக செயற்பாட்டாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply