• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பெண் ஊடகவியலாளர்கள் ஏன் மேலாடையின்றி வரவில்லை? - சர்ச்சையை கிளப்பிய பிரான்ஸ் அமைச்சர்

பெண் ஊடகவியலாளர்கள் ஏன் மேலாடையின்றி வரவில்லை என பிரான்ஸ் நீதித்துறை அமைச்சர் கேள்வி எழுப்பியதாக பிரான்சில் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது. ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்றபின், பிரான்ஸ் நீதித்துறை அமைச்சரான Eric Dupont-Moretti, என்னை கேள்வி கேட்க வந்த பெண் ஊடகவியலாளர்கள் ஏன் மேலாடையின்றி வரவில்லை என கேள்வி எழுப்பினார்.
  
அவர் பாலின ரீதியாக விமர்சித்ததாகவும், அது நகைச்சுவை அல்ல, அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று விமர்சனம் எழுந்தது.

திங்கட்கிழமையன்று, அமைச்சர் Eric மத்திய பிரான்சிலுள்ள Aurillac என்னும் இடத்தில் அமைந்துள்ள நீதிமன்றம் ஒன்றிற்குச் சென்றுள்ளார்.

மேலாடை அணியாத பெண்கள் கூட்டம் ஒன்று அந்த நீதிமன்றத்தை சேதப்படுத்தியுள்ளதால், சேதத்தை பார்வையிடுவதற்காக அவர் அங்கு சென்றிருந்தார்.

நடந்தது என்னவென்றால், மரினா என்னும் ஒரு பெண், மேலாடையின்றி நகரில் வலம் வந்ததற்காக தண்டிக்கப்பட்டுள்ளார். அவரை தண்டித்ததற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக ஒரு பெண்கள் கூட்டம் மேலாடையின்றி நீதிமன்றத்துக்குள் நுழைந்து அதை சேதப்படுத்தியுள்ளார்கள்.

அந்த மரினா என்னும் பெண், வெப்பம் அதிகமாக இருந்ததால், பல ஆண்கள் சட்டையில்லாமல் நடந்ததுபோலவே, தானும் சட்டை இல்லாமல் நடக்க விரும்பியதாக கூறியிருந்தார்.

ஆகவே, ஊடகவியலாளர்கள் சந்திப்புக்கு வந்த இடமும் சூடாகத்தான் உள்ளது. அதற்கு வந்த பெண்கள் மேலாடையில்லாமலா வந்தார்கள், இங்கே வெப்பம் அதிகமாக இல்லையா என்னும் கோணத்திலேயே அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளதாகவும், சட்டத்தை மதிப்பதுதான் சரியானது என்பதற்கு இந்த பெண் ஊடகவியலாளர்கள் ஆதாரம் என்பதை சுட்டிக்காட்டவே அவர் அப்படிச் சொன்னதாகவும், அமைச்சர் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. 
 

Leave a Reply