காலையில் எங்களின் பூபாளம்
சினிமா
அப்போது எனக்கு ஆறு வயது. காலையில் எங்களின் பூபாளமே இலங்கை வானொலியில் வரும் பாடல்கள்தான். காலையில் ஏழு மணிக்கு `பிறந்தநாள் இன்று பிறந்த நாள். நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்’ என்று டி.எம்.எஸ். குரலில் இலங்கை வானொலியின் திரையிசைப் பாடல்கள் நிகழ்ச்சி தொடங்கும்.
‘இன்று பிறந்த நாள் காணும்’, என்று நேயர்களிட மிருந்து வந்த கடிதங்கள் மூலமாக சில நேயர்களுக்கு இலங்கை வானொலி அன்றைய பிறந்த தின வாழ்த்துக்களைச் சொல்லும். இந்த `பிறந்த நாள்’ பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. ‘நாம் மூவர்’ படத்திற்காக அவர் எழுதிய பாடல் இது. ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், நாகேஷ் மூவரும் கதாநாயகர்களாக நடித்து கே. ஆர். பாலன் தயாரிப்பில் வெளிவந்த படம் இது.
அந்த நாளில் இந்த பாடலை இலங்கை வானொலியில் கேட்ட பலருக்கும் இது ‘நாம் மூவர்’ படப்பாடல் என்பதே தெரியாது. ஏதோ இலங்கை வானொலி தயாரித்த பாடல் என்றே தான் நினைத்திருப்பார்கள்.
ஆனால், இந்த பாடலில் எத்தனை ஆழமான வார்த்தைகளை கொட்டியிருப்பார் வாலி.
‘உறவு என்ற வானத்திலே – நாம்
பறவையாகலாம்
உள்ளம் என்ற தோட்டத்திலே – நாம்
மலர்களாகலாம்
காதல் என்ற சோலையிலே – நாம்
தென்றலாகலாம்
கண்கள் என்ற கோயிலிலே – நாம்
தெய்வமாகலாம்
ஒருவருக்கொருவர் எல்லைகள் நாம்
உள்ளதைச் சொல்லும் கிள்ளைகள் நாம்
அறிமுகம் என்பது முன்னுரையாக
அனுபவம் என்பது உள்ளுரையாக
ஆனந்தம் என்பது முடிவுரையாக
ஆண்டவன் எழுதிய காவியம் நாம்’
அருமையான வரிகள் இது.
எனக்கே இது வாலி எழுதிய பாடல் என்பது வெகு நாட்களுக்கு பிறகுதான் தெரியும்.
ஆனால் வாலி என்ற கவிஞர் என் மனதில் பதிந்தது இந்த பாடல் மூலமாக அல்ல.
1964ம் வருடம் வெளி வந்து வெள்ளி விழா கண்டது `கற்பகம்’. கே.எஸ். கோபாலகிருஷ்ணன் எழுதி, இயக்கி தயாரித்த இந்தப் படம் சென்னை வெலிங்டன் திரையரங்கில் வெளியானது. இந்த படத்தில்தான் கே. ஆர். விஜயா அறிமுகமானார்.
இந்த படத்தில் நான்கு பாடல்கள். எல்லா பாடல்களை பி. சுசீலா மட்டுமே பாடியிருப்பார். அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் வாலி.
இதில் வரும் ` அத்தை மடி மெத்தையடி, ஆடி விளையாடம்மா, ஆடும் வரை ஆடிவிட்டு அல்லி விழி மூடம்மா.’
இந்த பாடல் வாரத்துக்கு ஐந்து முறையாவது இலங்கை வானொலியில் ஒலிக்கும். அப்போது சிறுவர்களாக இருந்த எங்கள் மனதில் இந்த பாடல் பதிந்து போனது.
‘கற்பகம்’ படம் வந்த வருடம் 1964. இந்த படத்தின் வெற்றியால் சென்னை கோடம்பாக்கத்தில் கற்பகம் ஸ்டூடியோவை உருவாக்கினார் இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்.
அடுத்த வருடம் 1965ல் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம் வெளியானது. இந்த படத்தில் வந்த நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார். உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார். அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்’ இந்த பாடல் பட்டித்தொட்டியெங்கும் பரவியது. விஜயா புரொடக் ஷன்ஸ் சார்பாக நாகி ரெட்டியும், சக்ரபாணியும் தயாரித்த படம். படத்தை இயக்கியவர் சாணக்யா.
படம் வெள்ளி விழா கண்டது. அப்போதுதான் வாலி என்ற கவிஞர் பரவலாக பேசப்பட ஆரம்பித்தார். அதுவரையில் எந்த பிரபலமான சினிமா பாடலாக இருந்தாலும், அது கண்ணதாசன் பாடல்தான் என்று மக்கள் நினைத்திருந்த காலம் அது.
இந்த கவிஞர் வாலிக்கு நான் நெருக்கமாவேன் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. 1981 க்குப்பிறகு நான் அவருக்கு அறிமுகமானேன். அவர் எளிதில் எந்த பத்திரிகையாளரையும் நெருங்க விடமாட்டார். குமுதம் இதழுக்காக அவரை பேட்டி காண ஒரு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். `பேட்டியெல்லாம் வேண்டாம். உம்ம பேர் என்ன?’ என்று கேட்டார். நான் சுதாங்கன் என்றேன். பிறகு போன் பண்ணுங்க பார்க்கலாம் என்றார்.
அப்போது குமுதம் பத்திரிகையில் முழு நேர நிருபர்களே கிடையாது. பால்யூ போன்ற பிரபலமான நிருபர்கள் கூட பகுதி நேரம்தான். வாலி, அப்போது குமுதம் பத்திரிகையின் இணையாசிரியரான ரா. கி. ரங்கராஜனுக்கு போன் செய்து என்னைப் பற்றி விசாரித்திருக்கிறார். நான் பிரபல எழுத்தாளர் பி.ஸ்ரீயின் பேரன் என்று ரா.கி. ரங்கராஜன் சொல்லியிருக்கிறார்.
`அப்படியானால் அந்தப் பையனை எனக்கு போன் பண்ணச் சொல்லுங்க’ என்று வாலி ரா. கி. ரங்கராஜனிடம் சொல்லியிருக்கிறார்.
அப்போதெல்லாம் என் வீட்டில் போன் வசதி கிடையாது. நான் குமுதம் பத்திரிகைக்கு போன போது இந்த தகவலை ரங்கராஜன் என்னிடம் சொன்னார்.
நான் வாலியை தொடர்பு கொண்டேன்.
நான் இன்னாரின் பேரன் என்று எப்போதும் சொல்லிக்கொண்டதில்லை. என் சொந்த முயற்சியிலே முன்னேற வேண்டும் என்கிற தன்மானம் எனக்கு அதிகம் உண்டு.
வாலியோடு பேசியபோது, ` ஏம்பா, நீ பி.ஸ்ரீயின் பேரனா ? அதை சொல்லக் கூடாதா? நாங்களெல்லாம்
இன்னிக்கு கவிஞன்னு சொல்லிட்டு திரியறோம்னா அது உங்க தாத்தா மாதிரி தமிழறிஞர்கள் எங்களுக்கு போட்ட பிச்சை’ என்றார்.
அப்போது வாலி மகாலிங்கபுரத்தில் இருந்தார். ஒரு கறுப்பு கலர் பியட் கார் வைத்திருந்தார். காரை அவரே ஓட்டிக்கொண்டு போவார். அப்போதிலிருந்து அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது.
தமிழ் சினிமாவில் 1958-ல் முதன் முதலில் தெலுங்கு இசையமைப்பாளரான கோபாலம் என்பவரின் இசையில், மைசூர் இராஜ பரம்பரையைச் சார்ந்த ஏகாம்பர ராசன் என்பவரின் தயாரிப்பில் உருவான, ‘அழகர்மலைக் கள்வன்‘ என்ற தமிழ் திரைப்படத்தில் திரைப்படப் பாடலாசிரியராக வாலி அறிமுகமானார்.
அவர் எழுதிய முதல் பாடல் ‘நிலவும் தாமரையும் நீயம்மா இந்த உலகம் ஒருநாள் உனதம்மா‘ என்பதாகும். அதைப் பாடியவர் திருமதி பி.சுசீலா அம்மா அவர்கள்.
வாலியின் திரைப்பாடல்களைவிட அவரை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து அவரது தனிப்பாடல்கள்தான். காலையில் கோயில்களில் அவரது பக்திப் பாடல்கள் ஒலிக்கும். அவர் திருச்சி வானொலிக்காக எழுதி டி.எம்.எஸ். பாடிய `கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்’ என்ற பாடலும், ‘ஓராறு முகமும், ஈராறு கரமும், தீராத வினை தன்னைத் தீர்க்கும், துன்பம் வாராத நிலைதன்னைச் சேர்க்கும்’ என்ற பாடல்கள் இன்று வரை திகட்டாத பக்தி பாடல்கள் சுதாங்கன் அவர்கள் தினமலரில் எழுதியது. .