• Welcome to TamilsGuide
செய்திகள் 1

13வது திருத்தச் சட்டம் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது

இலங்கை

“தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத்  தீர்ப்பதற்கு 13வது திருத்த சட்டம் தீர்வாக அமையாது” என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்  சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்டி கட்டமைப்பில் அரசியல் தீர்வு என்பதையே தமிழரசுக்கட்சி முன்னெடுக்கும். எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினையைத்  தீர்க்கவேண்டுமானால் முன்னைய காலத்தினைப்போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பாகச் செயற்படவேண்டும். இதற்கான  தீர்மானத்தை எதிர்வரவுள்ள  தமிழரசுக்கட்சியின் மாநாட்டில் எடுக்கவுள்ளோம்.

தற்போது ஜனாதிபதி இனப்பிரச்சினை சம்பந்தமாகவும் 13ஆவது திருத்தம் சம்பந்தமாகவும் பாராளுமன்றத்திலே உரையாற்றியிருக்கின்றார். அதற்கு முன்னர் ரொமேஸ் டி சில்வா ஆணைக்குழு தலைமையில் தமிழரசுக் கட்சியும் ஏனைய கட்சிகளும் இந்த நாட்டினுடைய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு எவ்வாறானதொரு அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பது பற்றி குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

தமிழரசுக்கட்சியை பொறுத்தவரை  எமது  உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஷ்டிக் கட்டமைப்பில் ஒரு அரசியல் தீர்வு அரசியலமைப்பில் இடம்பெற வேண்டும்,அந்த அடிப்படையில் எடுக்கப்படுகின்ற தீர்மானம் அரசியலமைப்பாக்கப்பட்டால் அதன் மூலம் அரசியல் தீர்வு ஒன்று ஏற்படுவதற்கு நாங்கள் ஆதரவு வழங்கலாம், அதனையே  நாங்கள் முன்வைத்திருக்கின்றோம்.

தமிழரசுக்கட்சி மாத்திரமல்லாது பெரும்பாலான தமிழ் தேசிய அரசியலை அடிப்படையாகக்  கொண்ட கட்சிகளின் கருத்தும் 13வது திருத்தம் ஒற்றையாட்சி அரசியலமைப்புத்  திருத்ததிற்குள் உள்ளது என்பதே. திவிநெகும போன்ற சட்டங்கள் மூலம் மத்திய அரசு திரும்ப அதிகாரங்களை எடுக்ககூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

13வது திருத்த சட்டத்தினை நடைமுறைப்படுத்துவது என்பது இலங்கை இந்திய ஒப்பந்ததின் கீழ் ஏற்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.அதனை முழுமையாக நிறைவேற்றுவதனை நாங்கள் எதிர்க்கவில்லை.ஆனால் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு 13வது திருத்த சட்டம் முழுமையான தீர்வினை வழங்காது,அது தீர்வாக இருக்காது என்ற காரணத்தினால்தான் நாங்கள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்டி கட்டமைப்பில் ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் முன்னர் செயற்பட்டதுபோன்று ஒன்றாக செயற்படவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இனப்பிரச்சினைக்கான தீர்வாகவோ,தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்தோ ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என்பதற்காக எதிர்காலத்தில் தீர்மானங்களை எடுக்கவுள்ளோம்.ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம்தான் தமிழர்களுக்கான விடுதலை கிடைக்கமுடியும். எனவே சேர்ந்து செயல்படுவதற்கான தீர்மானத்தை எடுக்கவுள்ளோம்” இவ்வாறு மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply