• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேயிலை வர்த்தகம் தொடர்பாக சீனாவுடன் விசேட கலந்துரையாடல்

இலங்கை

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே தேயிலை வர்த்தகம் மற்றும் ஊக்குவிப்புக்கு நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன கலந்துரையாடியுள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன கடந்த 18 ஆம் திகதி சீனாவின் முன்னணி தேயிலை நிறுவனமான யுனான் சியாகுவான் டோச்சா (Yunnan Xiaguan Tuocha (Group) Co. Ltd) நிறுவனத்தை பார்வையிட்டார்.

யுனான் டாலியில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலை தேயிலை விற்பனை, உற்பத்தி, மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது.

தேயிலை உற்பத்தியில் சர்வதேச நன்மதிப்பைப் பெற்றுள்ள சியாகுவான் டோச்சா நிறுவனத்துக்கும் இலங்கைக்கும் இடையில் தேயிலை ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதன் தலைமை நிறைவேற்று அதிகாரி மற்றும் தேயிலை ஆராய்ச்சியாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்துடன் ஏற்கனவே தரவுகள் மற்றும் நிபுணத்துவத்தை பரிமாறிக்கொண்டுள்ள யுனான் சியாகுவான் டோச்சா தொழிற்சாலை, இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்துள்ளது.

தேயிலை ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு தொடர்பான மேலதிக கலந்துரையாடல்களுக்காக ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்புமாறு பிரதமர் குறித்த தரப்பினரிடம் கோரிக்கை விடுத்தார்.

இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க உள்ளிட்டோரும் இநத்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply