• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அறிஞர் அண்ணா விரும்பிய பாடல் !

சினிமா

“நலந்தானா ? நலந்தானா? உடலும், உள்ளமும் நலந்தானா?" என்ற அந்தப் பாடலைப் பற்றி நினைக்கத் தொடங்கியபோது . அண்ணா படம் பார்த்தபோது, அந்தக் காட்சி முடிவடைந்ததும் லேசான புன்னகையுடன், “இது கண்ணதாசன் எனக்காக எழுதிய பாட்டு’ என்று மெல்லிய குரலில் சொன்னார்கள்.

'தில்லானா மோகனாம்பாள்' படத்தோடு சம்பந்தப்பட்ட சிவாஜி கணேசன், பத்மினி, மதுரை சேதுராமன் பொன்னுசாமி, கே.வி.மகாதேவன் , கவியரசர், அருட்செல்வர் ஏ.பி.என், சுசீலா என்று அந்த படத்தோடு சம்பந்தப்பட்ட அத்தனை கலைஞர்களும் என் மனத்திரையில் ஒளிர்ந்தார்கள். கூடவே இந்தப் படத்தில் பணி புரியாத இன்னொருவர் பற்றிய நினைவையும் இந்த “நலந்தானா?" பாடல் தப்பாமல் என் மனதில் கொண்டு வந்தது. இந்த மாதிரி பலருக்கும் வந்திருக்கலாம். இந்த பாடலை நினைக்கும் போது நினைவுக்கு வரும் அந்த இன்னொருவர் பேரறிஞர் அண்ணா ! பேரறிஞரை நலம் விசாரிப்பது போலவே கவியரசர் கண்ணதாசன் இந்தப் பாடலை இயற்றியதாகச் சொல்வார்கள்... இந்தப் பாடலைக் குறிப்பிட்டு அறிஞர் அண்ணா அவர்களே தன் மடலில் எழுதிய மடல்...

உடல் நலக் குறைவோடு இருந்த அறிஞர் அண்ணா 1969 ஜனவரி 14ஆம் தேதி “காஞ்சி" பொங்கல் மலரில் தன் தம்பிமார்களுக்கு கடிதம் ஒன்றைத் தீட்டியிருந்தார். (அவர் இந்த மண்ணுலகை விட்டு மறைவதற்கு சில நாட்களுக்கு முன்பு...). அதிலிருந்து சில பகுதிகள் வருமாறு:-

“எந்தப் பணி எனக்கு இனிப்பும் எழுச்சியும் தந்து வந்ததோ- எந்தப் பணியிலே நான் ஆண்டு பலவாக மிக்க மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு வந்தேனோ - எந்தப் பணி மூலம் என்னை உன் அண்ணனாக உள்ளன்புடன் ஏற்றுக்கொண்டு பெருமிதத்துடன் இந்த உலகத்துக்கு அறிவித்து வந்தேனோ - எந்தப் பணி வாயிலாக என் கருத்துகளை உனக்கு அளித்து, உன் ஒப்புதலைப் பெற்று, அந்தக் கருத்துகளின் வெற்றிக்கான வழியினைக் காண முடிந்ததோ - எந்தப் பணி மூலம் தமிழகத்தை அறியவும், உலகத்தை உணரவும், தமிழ்ப் பண்பை நுகரவும் வழி கிடைத்து வந்ததோ - எந்தப் பணி மூலம் எப்போதும் உன் இதயத்தில் எனக்கு ஓர் இடம் கிடைத்து அது குறித்து நான் அளவற்ற அக மகிழ்ச்சி பெற முடிந்ததோ அந்தப் பணியினை முன்புபோலச் செய்ய முடியாதவனாக்கப்பட்டு, முடியவில்லையே என்ற ஏக்கத்தால் துக்கப்பட்டுச் சூழ்நிலையின் கைதி ஆக்கப்பட்டு கிடக்கிறேன் என்பதனை அறிவாய். ‘சூழ்நிலையின் கைதி' என்ற சொற்றொடருக்குத்தான், ‘முதலமைச்சர்' என்ற முத்திரையிட்டு இருக்கின்றனர்.

தம்பி! என் மனதுக்கு இனிமை தந்திடும் பணியிலே என்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியவில்லையே என்ற கவலை ஒரு புறம், அத்துடன் பின்னிப்பிணைந்து கொண்டு, என் பேரப்பெண் - இளங்கோவின் மகள் கண்மணி - மழழை மொழியில் பாடுகிறாள்: “நலந்தானா? நலந்தானா? உடலும் உள்ளமும் நலந்தானா?" என்று.

எனக்கென்னவோ, அந்தப் பாட்டைக் கேட்கும்போதெல்லாம், என் தம்பி- தங்கைகள் நாட்டின் நல்லோர் அனைவருமே என்னை “நலந்தானா?" என்று கேட்பது போலவே தோன்றுகிறது.

கடந்த ஓராண்டாகவே இந்தக் கேள்வி கிளம்பிய படி இருந்தது. அமெரிக்கா சென்று, அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய அளவுக்கு உடல்நலம் பாழ்பட்டது. ஆனால், அதனால் ஏற்பட்ட கவலையை நான் உதறித் தள்ளும் விதமாக அன்பும், கனிவும் நாடு முழுவதிலும் இருந்து கிடைத்தன. அரசியலில் நம்மோடு மாறுபட்டு இருப்பவர்களிலே பலரும் கனிவு காட்டக் கண்டேன். மனிதத்தன்மை, மடிந்து விடவில்லை என்பதை உணர்ந்தேன்."

இவ்வாறு அறிஞர் அண்ணா தன் மடலில் “நலந்தானா? நலந்தானா? ” பாடலைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.(தினத்தந்தியின் வரலாற்றுச் சுவடுகளில் படித்தது.).

Sukumar Shan

Leave a Reply