• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அஸ்வெசும சமூக நலன்புரித் திட்டத்தினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது - அமைச்சர் செஹான் சேமசிங்க

இலங்கை

அஸ்வெசும’ சமூக நலன்புரித் திட்டமானது சமுர்த்தி வேலைத்திட்டத்தையோ அல்லது சமுர்த்தி வங்கிகளையோ இல்லாதொழிக்க முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் அல்ல நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, அஸ்வெசும சமூக நலன்புரித்திட்டத்தில் 20 இலட்சம் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு, அவை பரீட்சிக்கப்பட்டு அதில் தற்போது 17 இலட்சத்து 92,265 விண்ணப்பங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ள என்றும் அவர் குறிப்பிட்டார்.

இப்பெயர் பட்டியல் பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னர் 10 இலட்சத்துக்கும் அதிகமான மேன்முறையீடுகளும், சுமார் 120,000 ஆட்சேபனைகளும் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், அவை தொடர்பான பரிசீலனைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறினார்.

முதியோர், சிறுநீரக நோயாளிகள் மற்றும் அங்கவீனர்களுக்கு வழங்கப்படும் நலன்புரிக் கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்பட்டது போல் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு அஸ்வெசும வேலைத்திட்டத்தின் ஊடாக எவரும் கைவிடப்படாத வகையிலேயே இந்த நடவடிக்கைகள் செயற்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அஸ்வெசும சமூக நலன்புரித் திட்ட உதவிகள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தற்போது பிரதேச செயலாளர்களின் தலைமையில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணியை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply