• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈரான் பெண்களுக்கு மீண்டும் கட்டுப்பாடு- ஹிஜாப் அணிய உத்தரவு

ஈரானின் குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த மாஷா அமினி (22) என்பவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என்று சிறப்பு படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் அவர் கடுமையாக தாக்கப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ந்தேதி பரிதாபமாக உயிரிழந்தார். மாஷாவின் மரணத்தால் ஈரானில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. ஹிஜாப்பை எரித்தும் முடியை வெட்டியும் பெண்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் போலீசார் தாக்கியதால் அவர் உயிரிழக்கவில்லை என்றும் உடல் நலக்குறைவால் தான் அவர் உயிரிழந்தார் என்றும் ஈரான் அரசு தெரிவித்தது.

இதை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். நாடு முழுவதும் நடந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 25 ஆயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து ஈரான் அரசு பெண்களுக்கு விதித்த கடுமையான நிபந்தனைகளை தளர்த்தியது. போலீசார் கண்காணிப்பை கைவிட்டதால் அமைதி திரும்பியது. இந்த நிலையில் மீண்டும் சிறப்பு படை போலீசார் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். சாலையில் வரும் பெண்கள் ஹிஜாப்பை முறையாக அணிந்து வர வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஹிஜாப் சரியாக அணியாமல் வெளியே வரும் பெண்கள் முதலில் எச்சரிக்கப்படுவார்கள். தொடர்ந்து இதே போல் அடுத்த முறையும் அவர்கள் வெளியே ஹிஜாப் அணியாமல் வந்தால் கைது செய்யப்பட்டு நீதித்துறை முன்பு நிறுத்தப்படுவார்கள் என்றார். போலீசாரின் இந்த திடீர் கட்டுப்பாடுகளால் ஈரானில் மீண்டும் போராட்டம் வெடிக்குமா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply