• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற நபர்

இலங்கை

யாழ்.அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில், இன்று ஆவரங்கால் – சர்வோதயா பகுதியைச் சேர்ந்த நபரொருவர் தனக்குத்தானே பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு  முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

”தன் மகள் தொடர்பில் அயல் வீட்டார் இழிவாகப்  பேசியமை தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளனர்” எனத்  தெரிவித்தே குறித்த நபர் இவ்வாறு  தனது உயிரை மாய்க்க முயற்சி செய்துள்ளார்.

இந்நிலையில் விரைந்து செயற்பட்ட பொலிஸார் குறித்த நபரை மடக்கிப்பிடித்து அவரைக்  காப்பாற்றியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஆவரங்கால் சர்வோதயா பகுதியில் 18 வயது இளைஞர்  ஒருவர் அவரது  அயல் வீட்டுப் பெண்ணைக்  காதலித்து வந்துள்ள நிலையில்  இருவரும் சுய விருப்பில் திருமணம் செய்யச் சென்றுள்ளனர்.

இதன்போது பெண் வீட்டார் மேற்படி இளைஞனின் வீட்டுக்கு சென்று தாக்குதலை மேற்கொண்டு சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தியிருந்தனர்.

இதனையடுத்து  பாதிக்கப்பட்ட இளைஞனின் வீட்டார் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில்  இது குறித்த செய்த முறைப்பாட்டுக்கு அமைய பெண்ணின் தந்தை மற்றும் பெரிய தகப்பனார் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் முற்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய  மேலும் 5 சந்தேகநபர்களைக்  கைது செய்யவும் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவு வழங்கியுள்ளது.

இதனடிப்படையில் குறித்த 5 சந்தேகநபர்களையும் இன்று பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அறிவித்துள்ள நிலையில், தவறு செய்யாத தாம் ஏன் முன்னிலையாக வேண்டும்? தனது மகளை அவதூறாக பேசிய அயல் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறியே  இவ்வாறு  தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இச்சம்பவத்தால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பரபரப்பான நிலையேற்பட்டது. இதேவேளை குறித்த நபர், காதலித்து திருமணம் செய்யச் சென்ற பெண்ணின் பெரிய தகப்பனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply