ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்! - மீண்டும் மோதல் தீவிரம்
ஈரானின் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளமை மீண்டும் போர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் (Kharg) தீவுக்கு அருகில் நங்கூரமிட்டிருந்த எண்ணெய் கப்பலை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும், கப்பலில் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், இது குறித்து ஈரானிய அதிகாரிகளோ அல்லது அமெரிக்க மத்திய கட்டளையகமோ (US Central Command) இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ கருத்துக்களையும் வெளியிடவில்லை.
கடந்த ஓகஸ்ட் 31 அன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கார்க் தீவு அழிக்கப்படுவது போன்ற ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.
கார்க் தீவு மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் முன்னதாக எச்சரித்திருந்தது. ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் மூடியதைத் தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை அமெரிக்கா தொடங்கியது.
இந்த சூழ்நிலையில், ஈரான் தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தை மேற்கொள்ளும் கார்க் தீவு பகுதியைச் சுற்றியுள்ள எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஈரானின் பொருளாதாரம் மற்றும் எண்ணெய் தொழில்துறைக்கு மேலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.






















