அமெரிக்க சிஐஏ இயக்குநர் மாஸ்கோவுக்கு ரகசிய பயணம் - உற்று நோக்கும் உலக நாடுகள்
இலங்கை
அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் (John Ratcliffe), ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திடீர் பயணமாக மாஸ்கோ சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ரகசிய பயணம், ரஷ்யா–உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
உற்று நோக்கும் உலக நாடுகள்
ராட்க்ளிஃப் (John Ratcliffe), மாஸ்கோ செல்வதற்கு முன்பாக, ரஷ்யாவின் மாஸ்கோ உள்ளிட்ட வடக்கு நகரங்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்துமாறு உக்ரைனிடம் அமெரிக்கா கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
திங்கள் முதல் புதன்கிழமை வரை இந்த கோரிக்கை அமலில் இருந்ததாகவும், உயர்மட்ட அமெரிக்க அதிகாரி ரஷ்யா செல்ல இருப்பது குறித்து உக்ரைனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, அமெரிக்க ராணுவத்தின் போயிங் C-17 விமானம் மாஸ்கோவில் உள்ள வ்னுகோவோ விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானம் அமெரிக்காவின் ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் இருந்து புறப்பட்டதாக விமான கண்காணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ரஷ்யா–ஈரான் நெருக்கம், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் புதிய பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் எதிர்காலத்தில் நேட்டோ நாடுகளுக்கு ஏற்படுத்தக்கூடிய சவால்கள் குறித்தும் இந்த பயணத்தின் பின்னணியில் முக்கியத்துவம் பெறுகின்றன.
கடந்த காலங்களில் அமெரிக்கா–ரஷ்யா கைதிகள் பரிமாற்றத்திலும் சிஐஏ முக்கிய பங்காற்றியுள்ளது. இதனால் ராட்க்ளிஃப்பின் தற்போதைய மாஸ்கோ பயணம் சர்வதேச அளவில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.























