முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை
இலங்கை
கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன 2008-ஆம் ஆண்டு சம்பவம் தொடர்பான வழக்கில், சந்தேகநபர் ஒருவராக முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (21) பிணை வழங்கியது.
இவ்வழக்கில் குற்றச் செயலை மறைக்க உதவியதாகவும் உடந்தையாக இருந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக நீதிமன்றம் விடுத்த அழைப்பாணைக்கு இணங்க நீதிமன்றத்தில் முன்னிலையான ரவீந்திர விஜயகுணரத்ன, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து தான் குற்றமற்றவர் என்று தெரிவித்தார்.
தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு தனிப்பட்ட பிணைகளின் அடிப்படையில் அவரை விடுதலை செய்யுமாறு நீதிவான் பாசன் அமரசேன உத்தரவிட்டார்.
இவ்வழக்கு டிசம்பர் 9 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.





















