கைப்பற்றப்பட்ட முக்கிய தொழில் நகரம் - ரஷ்யாவின் அறிவிப்பிற்கு கிடைத்த பதிலடி
இலங்கை
கிழக்கு உக்ரைனின் முக்கிய தொழில் நகரமான கொஸ்தியந்தினிவ்காவைத் தங்களது படைகள் முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய இராணுவத் தலைமை தளபதி ஜெனரல் வலேரி கெராசிமோவ், ஜனாதிபதி புதினிடம் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்தார்.
இதனை ஒரு "முக்கிய உத்திசார் வெற்றி" என புதின் பாராட்டினார். ஆனால், ரஷ்யாவின் இந்த வெற்றிக் கூச்சலை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அடியோடு மறுத்துள்ளார்.
"இது ரஷ்யாவின் அப்பட்டமான பொய், அந்த நகரம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்தால், புதின் அங்கு வந்து என்னைச் சந்திக்கத் தயாரா? உண்மை நிலை முற்றிலும் வேறானது" என்று அவர் சவால் விடுத்துள்ளார்.
மேலும், அமெரிக்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ட்ரம்பை ஏமாற்றவே புதின் இந்த உலக மகா பொய்யைக் கூறுகிறார் என்றும் அவர் குற்றச்சாட்டினார்.
அதே நேரத்தில், உக்ரைன் ரஷ்யாவின் 2ஆவது பெரிய நகரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள முக்கிய எண்ணெய் கிடங்கு மற்றும் குரோன்ஸ்டாட் இராணுவத் தளம் மீது 72 ட்ரோன்களை ஏவி அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனால் ரஷ்யாவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு பெல்கோரோட் நகரம் முற்றிலும் இருளில் மூழ்கியுள்ளது.
ரஷ்யாவின் பதில் தாக்குதலில் உக்ரைனின் ஜாபோரிஷியாவில் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் காயமடைந்துள்ளதால் அங்கு பெரும் போர் பதற்றம் நீடிக்கின்றது.























