இலங்கை மேல்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக தரம் உயர்த்தம்
இலங்கை
இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் 2025 இல் 5 சதவீத உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி ஆகியவற்றின் விளைவாக, தீவு நாடு மீண்டும் உயர்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக உலக வங்கி குழுமத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முன்னேற்றம் இலங்கையை ‘குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள்’ என்ற பிரிவிலிருந்து அடுத்த நிலைக்கு உயர்த்துகிறது.
அத்துடன், நாட்டின் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளில் ஒன்றிலிருந்து மீண்ட பிறகு ஏற்பட்டுள்ள பேரண்டப் பொருளாதாரச் செயல்பாட்டு முன்னேற்றங்களையும் இது பிரதிபலிக்கிறது.
உலக வங்கி, ‘அட்லஸ்’ (Atlas) வழிமுறையின்படி கணக்கிடப்படும் தனிநபர் மொத்த தேசிய வருமானத்தைப் (GNI) பயன்படுத்தி, நாடுகளின் வருமான வகைப்பாடுகளை ஆண்டுதோறும் புதுப்பிக்கிறது.
பொருளாதாரங்கள் குறைந்த வருமானம், குறைந்த-நடுத்தர வருமானம், உயர்-நடுத்தர வருமானம் மற்றும் உயர் வருமானம் என நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
உலகளாவிய பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, இந்த வருமான வரம்புகளும் ஒவ்வொரு ஆண்டும் மாற்றியமைக்கப்படுகின்றன.
நீண்ட காலப் பொருளாதாரச் சுருக்கம் மற்றும் பேரண்டப் பொருளாதாரச் சீரமைப்புக்குப் பின்னர், 2025-இல் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 5% வளர்ச்சியடைந்து பொருளாதார நடவடிக்கைகள் மீட்சியடைந்ததைத் தொடர்ந்து, இலங்கையின் வகைப்பாடு மாற்றப்பட்டுள்ளது.
இது நாட்டின் வருமான நிலை மற்றும் பொருளாதார அடிப்படைகள் வலுவடைந்துள்ளதைக் குறிக்கிறது.
திருத்தப்பட்ட வகைப்பாடு தனிநபர் தேசிய வருமானம் அதிகரித்துள்ளதைக் காட்டினாலும், இந்த வருமான அடிப்படையிலான வகைப்பாடுகள் பகுப்பாய்வு மற்றும் செயல்பாட்டு நோக்கங்களுக்காகவே உருவாக்கப்பட்டவை என்றும், அவை ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி நிலையை முழுமையாக மதிப்பிடுவதாக அமையாது என்றும் உலக வங்கி குறிப்பிடுகிறது.
























