• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் சோகம் - காணாமல் போன பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு

கனடா

கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் இரண்டு நாட்களாக தீவிரமாகத் தேடப்பட்டு வந்த நிலையில், காணாமல் போன பச்சிளம் குழந்தை ஒன்றின் சடலம் காடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:20 மணியளவில் ஓல்ட் கோச் வீதிக்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்து குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9:40 மணியளவில், பிரசவித்த உடனே உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் ஒருவர் உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸாருக்கு முதன்முதலில் தகவல் கிடைத்தது.

23 வயதான அந்தப் பெண் தற்போதும் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார்.அவருக்கு ஏற்பட்ட கடுமையான உடல்நலப் பாதிப்பு பிரசவத்தின் போது ஏற்பட்ட அவசர மருத்துவ நிலைமைகளால் நிகழ்ந்ததே தவிர, வன்முறை காரணமாக அல்ல என்று பொலிஸார் நம்புகின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுடன் குழந்தை இல்லாததை அடுத்து, பச்சிளம் குழந்தையைக் கண்டுபிடிப்பதற்கான அவசரத் தேடுதல் வேட்டை சனிக்கிழமை காலை தொடங்கியது.

பொலிஸாரும் தரைவழி மீட்புக் குழுவினரும் ஹாலிஃபாக்ஸின் வில்லட் வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தேடினர். பொலிஸ் தடயவியல் குழுவினர் அங்கிருந்த பெரிய குப்பைத் தொட்டிகளை சோதனையிட்டனர்.

விசாரணையில் கிடைத்த புதிய தகவல்களின் அடிப்படையில் தேடுதல் திசை மாற்றப்பட்டது. பிராஸ்பெக்ட் வீதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதியில் தேடியபோது, ஓல்ட் கோச் வீதிக்கு அருகில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.

குழந்தையின் மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய நோவா ஸ்கோடியா மருத்துவப் பரிசோதகர் குழுவினர் உடற்கூறாய்வு நடத்தவுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சனிக்கிழமை அன்று பெண்ணுக்குத் தெரிந்த நான்கு பேர் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களில் இருவர் விடுவிக்கப்பட்ட நிலையில், மற்ற இருவர் மீது முறைப்படி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
 

Leave a Reply