நான் புத்திசாலியான சர்வாதிகாரி - டிரம்ப்
தன்னை விமர்சிப்பவர்கள் 'முட்டாள்' என்று தம்மை அழைப்பதையே தான் மிகவும் வெறுப்பதாகவும், மாறாக 'புத்திசாலியான சர்வாதிகாரி' என்று அழைப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் ஆதரவாளர் கூட்டமொன்றில் உரையாற்றிய 79 வயதான டொனால்ட் ட்ரம்ப், தனது மனநலத் தகுதி குறித்த விமர்சனங்கள் எழுந்தபோது, அதனை முறியடிப்பதற்காகத் தான் பரிசோதனையைச் செய்ய விரும்புவதாகத் தனது மருத்துவரிடம் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
"நான் நீங்கள் சந்திக்கும் மிக புத்திசாலியான மனிதன். அந்த வகையில் ஒரு புத்திசாலி நாட்டை வழிநடத்துவதை நீங்கள் விரும்பவில்லையா?" என்றும் அவர் கூட்டத்தினரிடம் கேள்வி எழுப்பினார்.
"அவர்கள் என்னை 'முட்டாள்' என்று மிக மோசமாக விமர்சித்தார்கள். இந்தநிலையில் தாம், மருத்துவரிடம் சென்று, என்னை புத்திசாலியான சர்வாதிகாரி என்று கூப்பிட்டால் பரவாயில்லை, ஆனால் முட்டாள் என்று கூப்பிடுவதை தன்னால் ஏற்க முடியாது என ட்ரம்ப் விபரித்துள்ளார்.
அதற்கு மருத்துவர் 'அறிவாற்றல் பரிசோதனை' ஒன்று இருப்பதாகக் கூறியதாகவும், ஆரம்பத்தில் எளிதாகத் தொடங்கும் கேள்விகள் இறுதிப் பகுதியில் மிகவும் கடினமாக மாறும் என்றும் ட்ரம்ப் விவரித்துள்ளார்.
இந்தநிலையில், தனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் தான் இந்த அறிவாற்றல் பரிசோதனையை மூன்று முறை எதிர்கொண்டு, மூன்றிலும் முழுமையாகத் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளதாக ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜனாதிபதி அல்லது துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் எவரும் இத்தகைய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, டொனால்ட் ட்ரம்பின் இந்த வாதங்கள் குறித்து மருத்துவ நிபுணர்கள் மாற்றுத் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
டொனால்ட் ட்ரம்ப் தான் தேர்ச்சி பெற்றதாகக் கூறும் மொன்றியால் அறிவாற்றல் மதிப்பீட்டுப் பரிசோதனையானது (Montreal Cognitive Assessment), பொதுவாக 'டிமென்ஷியா' (Dementia) எனப்படும் ஞாபக மறதி மற்றும் மனநலச் சிதைவு நோயைக் கண்டறியப் பயன்படும் ஒரு ஆரம்பகட்டப் பரிசோதனை மட்டுமே என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மிகக் குறுகிய கால இடைவெளியில் ஒரு நபர் மூன்று முறை இப்பரிசோதனையை மேற்கொள்வது கவலைக்குரியது என டஃப்ட்ஸ் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் மனநலப் பேராசிரியர் ஹென்றி டேவிட் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.
ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜோன் கார்ட்னர் குறிப்பிடுகையில், ட்ரம்பின் அறிவாற்றல் திறன்கள் "வீழ்ச்சியடைந்து" வருவதற்கான வெளிப்படையான அறிகுறிகள் தென்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ள பென்டகன் தலைவர் பீட் ஹெக்செத் ஜனாதிபதி ட்ரம்பின் ஆரோக்கியத்தைப் பாராட்டியுள்ளார்.
நீண்ட காலத்திற்குப் பின்னர் அமெரிக்கா கண்ட மிகச் சிறந்த, கூர்மையான மற்றும் நுண்ணறிவுமிக்க முப்படைகளின் தளபதி ட்ரம்ப் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.























