அமெரிக்காவில் வைத்தியசாலைக்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய கைதி- பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு, கொள்ளை வழக்கில் கைதான ஒருவரைப் பரிசோதனைக்காக பொலிஸார் அழைத்து சென்றனர்.
அப்போது பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்த அந்த நபர், எதிர்பாராத விதமாக மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகள் மீது திடீரென சரமாரியாக சுட்டார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 38 வயதுடைய பொலிஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அவருடன் இருந்த 57 வயதுடைய மற்றொரு பொலிஸ் அதிகாரி துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்தார்.
அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய கைதி அங்கிருந்து தப்பியோடினார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனை முழுவதும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
சில மணி நேரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
துப்பாக்கியை அவர் எப்படி மருத்துவமனைக்குள் கொண்டு வந்தார் என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






















