ஏர் கனடா விமான விபத்து - உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்கள்
கனடா
ஏர் கனடா விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
நேற்று முன்தினம், அதாவது, மார்ச் மாதம் 22ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இரவு, கனடாவின் மொன்றியலிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள LaGuardia விமான நிலையத்தில் சென்று இறங்கிய ஏர் கனடா விமானம் ஒன்று, தீயணைக்கும் ட்ரக் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விமானம் பத்திரமாக தரையிறங்க, இன்னும் சில நிமிடங்களில் விமானத்திலிருந்து இறங்கிவிடலாம் என்னும் எண்ணத்திலிருந்த பயணிகள், எதிர்பாராத ஒரு அதிர்ச்சியை சந்தித்தார்கள்.
ஆம், அதே விமான நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு விமானத்தில் ஏதோ துர்நாற்றம் வீசுவதாக தகவல் கிடைக்க, அந்த விமானத்தை பரிசோதிப்பதற்காக செல்வதற்காக தீயணைக்கும் வாகனம் ஒன்று விமான கட்டுப்பாட்டு அறையிடம் அனுமதி கோர, அலுவலர் ஒருவர் அதற்கு அனுமதி கொடுத்துள்ளார்.
அதைத் தொடர்ந்து அந்த தீயணைப்பு வாகனம் வேகமாக புறப்பட, அப்போது ஏர் கனடா விமானம் வந்து விமான ஓடுபாதையில் தரையிறங்கியுள்ளது.
விமானம் தரையிறங்கும் நேரத்தில் தீயணைப்பு வாகனத்துக்கு அனுமதி கொடுத்தது தவறு என்பதை உணர்ந்த விமான கட்டுப்பாட்டு அலுவலர், தீயணைப்பு வாகனத்தை நிறுத்துமாறு அவசர அவசரமாக குரல் கொடுக்க, ஆனால், அதற்குள் காலம் கடந்துவிட்டது.
ஆம், மணிக்கு 39 கிலோமீற்றர் வேகத்தில் ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்த விமானம் ட்ரக் மீது மோத, விமானத்தின் முன்பகுதி சிதைந்துபோனது.
இந்த துரதிர்ஷ்ட சம்பவத்தில், விமானத்தை செலுத்திக்கொண்டிருந்த விமானியும் சக விமானியும் உயிரிழந்துள்ளார்கள்.
விமானத்தில் 72 பயணிகளும் நான்கு பணிப்பெண்களும் இருந்த நிலையில், அவர்களில் 41 பேர் காயமடைந்ததாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பலர் பின்னர் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது, உயிரிழந்த விமானிகள் குறித்த சில விவரங்கள் வெளியாகியுள்ளன.
விமானத்தை இயக்கியவர் ஆண்டோயின் ஃபாரஸ்ட் (30). கனடாவின் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த ஃபாரஸ்ட், சிறுவயது முதலே விமானியாகும் ஆசை கொண்டிருந்தவர் என்றும், கடின உழைப்பாளி என்றும் அவரது சகாக்கள் கூறுகிறார்கள்.
ஃபாரஸ்டின் சக விமானியின் பெயர் மெக்கன்ஸி குந்தர் (Mackenzie Gunther). ஒன்ராறியோவில் விமான பயிற்சி பெற்ற குந்தரைக் குறித்து அதிக தகவல்கள் வெளியாகவில்லை.





















