காலநிலை மாற்றத்தினால் அழியும் நிலையில் பென்குயின்கள்
பூமியில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் அந்தாட்டிக்காவில் பனிக்கட்டிகள் உருகுவதால், அங்குள்ள எம்பரர் பென்குயின்கள் (Emperor penguins) பேரழிவைச் சந்தித்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அந்தாட்டிக்காவில் பென்குயின்கள் ஆண்டுதோறும் பழைய இறகுகளை உதிர்த்து புதிய இறகுகளை வளர்க்கும் (Catastrophic moult) திறன் கொண்டவையாக காணப்படுகின்றன.
புதிய இறகுகள் வளர்வதனால் பென்குயின்களால் 40 நாட்கள் நீரில் நீந்த முடியாது என்பதுடன் அவை பனிக்கட்டிகள் மீதே தங்கியிருக்க வேண்டும் இதனால் குறித்த பென்குயின்கள் பேரழிவைச் சந்திப்பதற்கான நிலைமை உருவாகியுள்ளது.
இதேவேளை 2022-24 காலப்பகுதியில் கடல் பனிக்கட்டிகள் வரலாறு காணாத அளவில் உருகி வருவதாக ஆய்வாளர்கள் கூறிவரும் நிலையில் , பென்குயின்கள் தங்குவதற்கு இடமில்லாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் தரவுகளை ஆய்வு செய்த விஞ்ஞானியான பீட்டர் ஃப்ரெட்வெல், ஆயிரக்கணக்கான பென்குயின்கள் உறைபனி நீரில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என அஞ்சுவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேற்கு அந்தாட்டிக்காவில் வாழும் உலகின் 40 வீதமான பென்குயின்கள் தற்போது மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.






















