கனடா மீதான வரி விதிப்பிற்கு எதிராக அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் வாக்களிப்பு
கனடா
கனடா மீது அமெரிக்கா விதித்துள்ள சுங்கவரி நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் புதன்கிழமை முக்கிய வாக்களிப்பு நடைபெற்றது.
டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ள வர்த்தக நடவடிக்கைகளை திரும்பப் பெறும் நோக்கில் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
அமெரிக்கா–கனடா எல்லையில் “பென்டனில் அவசரநிலை” நிலவுகிறது என்ற காரணத்தைக் சுட்டிக்காட்டி, சர்வதேச பொருளாதார அவசர அதிகாரச் சட்டம் (IEEPA) கீழ் டிரம்ப் 35 சதவீத சுங்கவரியை கனடாவுக்கு விதித்திருந்தார்.
இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜனநாயகக் கட்சியினருடன் ஆறு குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் இணைந்து ஆதரவு வழங்கினர்.
தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டாலும், அதிபரின் மறுப்பை (veto) மீற வேண்டிய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அடுத்ததாக இது செனட் சபைக்கு அனுப்பப்படவுள்ளது. இரு சபைகளும் அங்கீகரித்த பின்னரே சுங்க வரிகளை ரத்து செய்யும் நடவடிக்கை இறுதி நிலைக்கு செல்லும். தீர்மானத்தை அறிமுகப்படுத்திய ஜனநாயகக் கட்சி உறுப்பினர் கிரெகரி மீக்ஸ், “கனடா எங்கள் நண்பரும் முக்கிய கூட்டாளியும் ஆகும்; அது அச்சுறுத்தல் அல்ல” என தெரிவித்தார்.
அமெரிக்க அரசுத் தரவுகளின்படி, வட எல்லையில் கைப்பற்றப்படும் பென்டனில் அளவு மெக்சிகோ எல்லையை ஒப்பிடுகையில் மிகக் குறைவானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மறுபுறம், சில குடியரசுக் கட்சி உறுப்பினர்கள், போதைப்பொருள் பிரச்சினை உண்மையானது என்றும், கனடா போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வாதிட்டனர்.
இந்நிலையில், உருக்கு, அலுமினியம், வாகனங்கள் மற்றும் மரவளம் போன்ற துறைகளில் விதிக்கப்பட்ட தனித்தனி சுங்க வரிகளாலும் கனடா ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது.
IEEPA சட்டத்தை பயன்படுத்தி சுங்கவரி விதிக்கும் அதிகாரம் குறித்து அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இந்த விவகாரம் அரசியல் மற்றும் சட்ட ரீதியாக மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.






















