ஓமன் வளைகுடாவில் ஈரான் கடல் பகுதிக்குள் அத்துமீறிய அமெரிக்க போர் கப்பல்- எல்லையில் பதற்றம்
அமெரிக்கா- ஈரான் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. சமீபத்தில் இஸ்ரேல்- ஈரான் இடையே மோதலின்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கியது.
ஈரானின் 3 முக்கிய அணு நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் ஏற்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஈரான் கடல் பகுதிக்குள் அமெரிக்க போர் கப்பல் அத்துமீறியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஈரானின் அரசு தொலைக்காட்சி கூறியதாவது:-
ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் கடல்வழி பகுதிக்குள் அமெரிக்க போர்க்கப்பலான யு.எஸ்.எஸ். பிட்ஸ்ஜெரால்டு அத்துமீறி நுழைய முயன்றது.
இதனையடுத்து, ஈரானிய படையை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்று அமெரிக்க போர் கப்பலை எதிர்கொண்டது. அந்த ஹெலிகாப்டர் அமெரிக்க கப்பலின் மீது நேரடியாகப் பறந்து சென்றது.
ஈரான் கடல்பகுதியில் இருந்து விலகி செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது ஈரான் ஹெலிகாப்டர் அந்த பகுதியை விட்டு செல்லவில்லை என்றால், அதனை இலக்காக கொள்ள வேண்டியிருக்கும் என அமெரிக்க கப்பலில் இருந்து அச்சுறுத்தல் விடப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஈரான் விமான பாதுகாப்பு படையினர், அந்த ஹெலிகாப்டர், ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு திட்ட முழு பாதுகாப்பின் கீழ் உள்ளது என தெரிவித்தது. இறுதியாக, அமெரிக்க கப்பல் தெற்கு நோக்கி பின்வாங்கி சென்றது என தெரிவித்தது.
இதுதொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளை படை கூறும்போது, பாதுகாப்பான மற்றும் தொழில்துறையிலான உரையாடலாகவே இருந்தது என்றும் அதனால், அமெரிக்க கப்பலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தவறான தகவல்களைப் பரப்ப ஈரான் முயற்சிக்கிறது என்றும் தெரிவித்தது.






















