• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கை – சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம் - அமைச்சரவை ஒப்புதல்

இலங்கை

இலங்கையில் செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் மேம்பாடு மற்றும் மூலோபாய முன்னேற்றத்திற்காக, சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவு திட்டம் (AI Singapore) உடன் ஒத்துழைப்பு ஏற்படுத்தும் முன்மொழிவுக்கு அமைச்சரவை இன்று (22) அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் AI Singapore திட்டத்துடன், இலங்கையின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கில் விரிவான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றை கையெழுத்திட்டு, இந்த ஒத்துழைப்பை சட்டரீதியாக உறுதிப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதற்கமைய, இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் இடையே MoU ஒன்றை கையெழுத்திட ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கும் அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

இந்த ஒத்துழைப்பு, இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் ஒரு முக்கியமான மைல் கல்லாக அமைவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply