ரயிலுடன் மோதி காட்டு யானை உயிரிழப்பு
இலங்கை
கல்லெல்ல பகுதியில் ரயிலுடன் மோதி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது.
கல்லெல்ல பகுதியில் இன்று (18) அதிகாலை 5:30 மணியளவில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி குறித்த யானை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு இறந்த காட்டு யானை சுமார் 15 வயதான 8 அடி உயரமானது என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த காட்டு யானை அப்பகுதியில் உள்ள நெல் களஞ்சியசாலைகளை உடைத்து அவற்றினுள் நுழைந்து நெல்லை உணவாக உட்கொள்வதாகவும், இன்று அதிகாலை 3.00 மணி முதலே காட்டு யானை கிராமத்தில் சுற்றித் திரிந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த யானை கிராமத்திற்குள் நுழைந்த போது வனவிலங்குத் திணைக்களத்திற்கு தகவல் வழங்க கிராம மக்கள் நடவடிக்கை எடுத்தபோது , அதிகாரிகள் தொலைபேசி இணைப்பை துண்டித்ததாக குற்றம்சாட்டியதுடன், வனவிலங்குத் திணைக்களம் இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற ஒரு துயரம் நிகழ்ந்திருக்காது என்றும் கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.






















