பிரமிட் திட்டங்கள் குறித்து வடக்கில் விழிப்புணர்வு செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது
இலங்கை
பிரமிட் திட்டங்களில் ஈடுபடுவதனால் ஏற்படும் பாதகமான பொருளாதார விளைவுகள் மற்றும் பிரமிட் திட்டங்களின் பரவலைத் தடுக்க அத்தகைய திட்டங்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்த தேசிய விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் யாழ். மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் (16) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கருத்து தெரிவித்த மாவட்ட செயலர்,
ஜனாதிபதி செயலகம் மற்றும் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரமாக ஜூலை 14 முதல் 18 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இவ் தேசிய விழிப்புணர்வு வாரத்தில் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களை ஒருங்கிணைத்து பிரமிட் திட்டங்களில் ஈடுபடுவதனால் ஏற்படும் பாதகமான பொருளாதார விளைவுகள் மற்றும் பிரமிட் திட்டங்களின் பரவலைத் தடுக்க அத்தகைய திட்டங்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்து விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இவ் விழிப்புணர்வு நிகழ்வின் வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய அலுவலக சிரேஷ்ட முகாமையாளர் கே. தர்மேந்திரா கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சிவகரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி)பா. ஜெயகரன், உதவி மாவட்ட செயலாளர் உ.தா்சினி மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.






















