யாழில் குடும்பஸ்தர் ஒருவரைக் கடத்தி சென்று சித்திரவதை புரிந்த நால்வருக்கு விளக்கமறியல்
இலங்கை
யாழில். வட்டி பணம் செலுத்த தவறியவரை கடத்தி சென்று சித்திரவதை புரிந்த நால்வர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது” நபர் ஒருவர் குடும்பஸ்தர் ஒருவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அக்குடும்பஸ்தர் குறித்த பணத்தை செலுத்தத் தவறியதால் ஆத்திரமடைந்த நபர் , மூவருடன் இணைந்து அக்குடும்பஸ்தரைக் கடத்திச் சென்று அவர் மீது தாக்குதல் மேற்கொண்டு அவரை நிர்வாணமாக்கி சித்திரவதை புரிந்து அதனை தமது திறன்பேசியில் காணொளியாகவும் பதிவு செய்துள்ளனர்.
பின்னர் பணம் பெற்றவரை மிரட்டி விடுவித்த நிலையில், அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வட்டிக்கு பணம் கொடுத்தவர் உள்ளிட்ட நால்வரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் பின்னர் நால்வரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





















