• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மனைவிக்கு ரசாயனம் கலந்த உணவு வழங்கப்படுவதால் உடல்நிலை பாதிப்பு - இம்ரான்கான் குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து 2022-ம் ஆண்டு வரை முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் பிரதமராக இருந்தார். அப்போது வெளிநாட்டு தலைவர்கள், பிரமுகர்கள் அளித்த பரிசுப்பொருட்களை அரசிடம் ஒப்படைக்காமல் விற்று ஊழல் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் பல்வேறு ஊழல் புகார்களும் எழுந்தது.

இது தொடர்பாக இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் பாகிஸ்தான் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தனது மனைவிக்கு ஜெயிலில் விஷம் கொடுத்து கொல்ல முயற்சிப்பதாக இம்ரான்கான் ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்தார். என் மனைவி ஜெயிலில் அடைக்கப்பட்டதற்கு ராணுவ தளபதி ஜெனரல் அசீம் முஷிர்தான் காரணம் என்றும் மனைவிக்கு ஏதாவது நேர்ந்தால் அவரை விட மாட்டேன், அரசியல் சட்டத்துக்கு விரோதமான அவரது சட்ட விரோத நடவடிக்கையை அம்பலப்படுத்துவேன் என்றும் இம்ரான் கான் கூறினர்.

தற்போது மீண்டும் அவர் புதிய குற்றச்சாட்டினை சுமத்தி உள்ளார்.

49 வயதாகும் தனது மனைவி புஷ்ராபீவிக்கு ஜெயிலில் வழங்கப்படும் உணவில் கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயனம் கலந்து கொடுக்கப்படுகிறது.

இதனால் அவர் நெஞ்சு எரிச்சல், தொண்டை வலி, வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலை மோசம் அடைந்து வருகிறது. ஆனால் மனைவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யாமல் இருப்பதில் ஜெயில் அதிகாரிகள் பிடிவாதமாக இருக்கிறார்கள். எனவே தனியார் மருத்துவமனை மூலம் மனைவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும் என இம்ரான்கான் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ராபீவிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இந்த உத்தரவால் இருவருக்கும் விரைவில் மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது.
 

Leave a Reply