• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரஃபா மீது இஸ்ரேல் வான்தாக்குதல் - 6 சிறுவர்கள் உள்பட 9 பேர் உயிரிழப்பு

காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், காசாவின் வடக்குப்பகுதியை ஏறக்குறைய உருக்குலைத்துவிட்டது. தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரும் இஸ்ரேல் ராணுவத்தின் கொடூர தாக்குதலுக்கு உள்ளானது. தங்களது இலக்கு முடிந்து விட்டதால் இந்த நகரில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்திருந்தது.

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போரின் நோக்கம் நிறைவேற ரஃபா மீது தாக்குதல் நடத்த வேண்டும் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இந்த நகரில் சுமார் 10 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ரஃபாவின் அருகில் உள்ள டெல் சுல்தான் நகரின் மேற்கு பகுதியில் மக்கள் வசிக்கும் இடத்தின் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை (நேற்று) நடத்திய தாக்குதலில் ஆறு குழந்தைகள் உள்பட 9 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட ஆறு குழந்தைகள், இரண்டு பெண்கள், ஒரு ஆண் ஆகியோரின் உடல்கள் ரஃபாவில் உள்ள அபு யூசெப் அல்-நஜ்ஜர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இறந்தவர்களின் உடல்களை கட்டிப்பிடித்து உறவினர்கள் கதறியது நெஞ்சை பிளப்பதுபோல் இருந்தது.

காசா எகிப்பு எல்லையில் அமைந்துள்ளது. காசாவில் மொத்த மக்களை தொகையான 2.3 மில்லியனில் பாதிக்கும் மேற்பட்டோர் ரஃபாவில் வசித்து வருகின்றனர். இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவில் மற்ற பகுதிகளில் இருந்து இங்கு குடிபெயர்ந்துள்ளனர்.
 

Leave a Reply