• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்திய மாலுமிகள் 16 பேரை ஈரான் விடுவித்தது

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த 3 முக்கிய அதிகாரிகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும் கடந்த மாதம் 13-ந்தேதி ஓமன் வளைகுடா அகில் ஹார்முஸ் ஜலசந்தியையொட்டிய பகுதியில் இஸ்ரேல் தொடர்புடைய எம்.எஸ்.சி. ஏரீஸ் என்ற சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்தது.

அந்த கப்பலில் 17 இந்தியர்கள் உள்பட 25 மாலுமிகள் இருந்தனர். இந்திய மாலுமிகளை மீட்க ஈரானுடன் இந்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இதற்கிடையே ஒரு இந்திய மாலுமி மட்டும் விடுவிக்கப்பட்டு அவர் நாடு திரும்பினார்.

இந்த நிலையில் சுமார் 20 நாட்களுக்கு பிறகு 16 இந்திய மாலுமிகள் உள்பட கப்பலில் இருந்த 24 பேரையும் ஈரான் விடுவித்துள்ளது.

இது தொடர்பாக ஈரான் வெளியுறவுத் துறை மந்திரி ஹூசைன் அமிராபக்துல்லா ஹியன் கூறுகையில், "இஸ்ரேலுக்குத் தொடர்புடையதாக கடந்த மாதம் சிறைபிடிக்கப்பட்ட எம்.எஸ்.சி. ஏரீஸ் சரக்குக் கப்பலில் பணிபுரிந்த அனைத்து மாலுமிகளும் விடுவிக்கப்பட்டனர்.

மாலுமிகளின் விடுதலையானது ஈரானின் மனிதாபிமான நடவடிக்கையாகும். கப்பலின் கேப்டன் தலைமையில் மாலுமிகள் அனைவரும் அவரவர் சொந்த நாட்டுக்குத் திரும்பலாம். ஆனால் கப்பல் மட்டும் ஈரான் காவலிலேயே இருக்கும்" என்றார்.


 

Leave a Reply