ஆல்ப்ஸ் மலையில் மலையேற்றத்துக்குச் சென்ற சுவிஸ் நாட்டவர்கள் - வெளியாகியுள்ள புதிய தகவல்
சுவிஸ் நாட்டவர்கள் சிலர் ஆல்ப்ஸ் மலையில் மலையேற்றத்துக்குச் சென்ற நிலையில் மாயமானார்கள். பின்னர், அவர்களில் ஐந்துபேர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அந்த துயர சம்பவம் குறித்த புதிய தகவல்கள் சில வெளியாகியுள்ளன.
சுவிஸ் நாட்டவர்கள் ஆறுபேர், கடந்த வார இறுதியில் ஆல்ப்ஸ் மலையில் மலையேற்றத்துக்குச் சென்றுள்ளார்கள். அவர்கள் மாயமானதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சனிக்கிழமை அவர்களைத் தேடும் பணி துவங்கியது.
இந்நிலையில், காணாமல் போனவர்களில் ஐந்து பேர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக Valais மாகாண பொலிசார் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் சுவிஸ் நாட்டவர்கள் என்றும், 21 முதல் 58 வயது வரையுடையவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
உயிரிழந்த ஐந்துபேரும் உறவினர்கள். காணாமல் போன ஆறாவது நபர், Fribourg என்னுமிடத்தைச் சேர்ந்த ஒரு 28 வயது பெண். அவர் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. அவர், உயிரிழந்தவர்களில் ஒருவருடைய காதலி ஆவார்.
இதற்கிடையில், ஒரு வாரம் தேடியும் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்கமுடியாததால், அவரைத் தேடும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். என்றாலும் இடையிடையே அந்த பகுதிக்குச் சென்று, அவர் கிடைக்கும் வரை அந்த பகுதியைக் கண்காணிக்க இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில், மலையேற்றத்துக்குச் சென்ற சுவிஸ் நாட்டவர்கள் உயிர் பிழைப்பதற்காக செய்த விடயங்கள் குறித்த புதிய தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.
அதாவது, அவர்கள், பாதகமான சூழலில் இருந்து தப்புவதற்காக, பனியில் குகை ஒன்றைத் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஆனால், இப்படி ஒரு அசாதாரண சூழ்நிலையை தாங்கள் எதிர்கொள்ள நேரிடலாம் என அவர்கள் சற்றும் எதிர்பாராததால், அவர்களிடம் பள்ளம் தோண்டுவதற்கான கருவிகள் எதுவும் சரியாக இல்லை.
ஆகவே, அவர்களுடைய முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. ஹெலிகொப்டரிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளில், அவர்கள் பனியைத் தோண்டி ஓரிடத்தில் குவித்துவைத்துள்ளதைக் காணலாம்.