• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குண்டு வெடிப்பில் சிக்கிய காவல்துறை வாகனம் - 5 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் சமீப சில மாதங்களாக நாடு முழுவதும் ஆங்காங்கே பயங்கரவாதிகளால் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், தற்கொலை படை தாக்குதல்களும் நடைபெறுகின்றன.

பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ளது கைபர் பக்துங்க்வா பிராந்தியம் (Khyber Pakhtunkhwa province). இங்குள்ள பஜவுர் (Bajaur) மாவட்டத்தின் மெஹ்முந்த் பகுதியில், போலியோ நோய் தடுப்புக்காக தடுப்பூசி செலுத்தும் முகாம் ஒன்று நடைபெற இருந்தது.

இதற்கு பாதுகாப்பு வழங்க காவல்துறையினர் நியமிக்கப்பட்டனர்.

இப்பணிக்காக சுமார் 25 காவல்துறையினரை ஏற்றி கொண்டு சென்ற காவல்துறை டிரக் ஒன்றின் அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.

இந்த பயங்கரவாத தாக்குதலில் சுமார் 5 காவல்துறையினர் உயிரிழந்தனர்; 20 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த காவல்துறையினர் பஜவுர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எதிர்பாராத இந்த குண்டு வீச்சு சம்பவத்தினால், அப்பகுதியில் நடைபெறுவதாக இருந்த போலியோ தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டது.

"இது போன்ற கோழைத்தனமான தாக்குதல்களால் காவல்துறையினரின் மன உறுதியும் முனைப்பும் எந்த வகையிலும் குறைந்து விடாது" என கைபர் பக்துங்க்வா பிராந்திய காபந்து முதல்வர் அர்ஷத் ஹுசைன் ஷா தெரிவித்தார்.

இன்னும் சில தினங்களில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியும், பயங்கரவாத தாக்குதல்களும் அடுத்து வரும் ஆட்சிக்கு சவாலாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
 

Leave a Reply