• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காரைநகரில் கடற்படையின் காணி அபகரிப்புக்கு எதிராக அணிதிரளுமாறு கோரிக்கை

இலங்கை

பௌத்த – சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் இலங்கை அரசாங்கத்தின் அனைத்து திணைக்களங்களும், தமிழர் தாயகத்தை கபளீகரம் செய்வதிலேயே குறியாக இருக்கின்றன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
  
அதன் ஓர் அங்கமாக காரைநகரில் கடற்படையினருக்கு காணி சுவீகரிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அதை முறியடிக்கும் வகையில் அனைவரும் அன்று காலை 8 மணிக்கு அணிதிரளவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில், “போரைக் காரணம் காட்டி தாயகத்தில் நிலைகொண்ட இலங்கைப் படைகள் தற்போது அந்தக் காணிகளை நிரந்தரமாகச் சுவீகரிக்க முயல்கின்றன. காணிகளை விடுவிப்போம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினாலும் அவரது கருத்து செயலுருப்பெறவில்லை.வெறுமனே சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காகவே அவர் அப்படி கூறுகின்றார்.

இலங்கை அரச இயந்திரந்தின் ஒவ்வொரு திணைக்களங்களும் தமிழர் தாயகத்தை எப்படி வல்வளைப்புச் செய்யலாம் என்பதிலேயே குறியாக இயங்குகின்றன.

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரத்தை வன உயிரிகள் திணைக்களம் சுவீகரிப்பதற்கான முயற்சிகளை ஆரம்பித்திருக்கின்றது.

இதேபோல காரைநகர் நீலங்காட்டு சந்தியில் கடற்படையினரின் முகாமுக்காக தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமிப்பதற்கு எதிர்வரும் 12ஆம் திகதி நில அளவீடு முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

எமது மூதாதையர் ஆண்ட மண்ணை அந்நியரிடம் இழக்க முடியாது. நிலத்தை மீட்டுக்கும் இந்தப் போராட்டத்தில் அந்தக் காணி உரிமையாளர்கள் மாத்திரமல்ல பொதுமக்களும் பங்கேற்று ஆதரவு தரக்கோருகின்றேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a Reply