• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கையில்லை - எம்.ஏ.சுமந்திரன்

இலங்கை

உள்ளகப் பொறிமுறையினூடாக எம் மக்களின் குறைப்பாடுகளுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் நீதி கிடைக்காது என்பது கடந்த 15 வருட காலமே சான்றாக அமைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில் தற்போது இன்னொரு ஆணைக்குழுவை அமைப்பதானது, செப்டெம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஜெனிவாவிற்கு காண்பிக்கும் கண் துடைக்கும் ஒரு நாடகமாகும் எனவும் எம்.ஏ.சுமந்திரன் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்தார்.

உலகத்தில் இடம்பெறுகின்ற எந்தவொரு யுத்தமும் சுத்தமான யுத்தம் கிடையாது எனவும், ஆயுதப் போரில் அத்துமீறல்கள் இடம்பெற்றே தீரும். எனினும், பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு பொறுப்புள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

விஷேடமாக காணமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில், என்ன நடந்தது? யார் இதற்கு பொறுப்பு? அவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா? இல்லையா? இந்த விடயங்களை தெளிவுப்படுத்துவதும் அதற்குரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணத்துக்கான ஆணைக்குழு முன்பாக சாட்சியங்கள் வழங்கப்பட்டதன் பின்னர், யுத்தத்தின் இறுதி இரண்டு நாட்களில் 3000 க்கும் அதிகமானவர்கள் அரச படையினரிடம் சரணடைந்தார்கள் என அரசாங்கம் நியமித்த ஆணைக்குழுவினாலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையாவது வெளிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply