• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மகளை கொன்றவன், நாட்டை காக்கும் வீரனா? - புதினை தாக்கும் தாய்

ரஷியாவில் வசித்து வந்தவர் வேரா பெக்டெலேவா (Vera Pekhteleva). இவர் விளாடிஸ்லாவ் கான்யுஸ் (Vladislav Kanyus) என்பவரை காதலித்து வந்தார். இருவரின் உறவில் திடீரென கருத்து வேற்றுமை ஏற்பட்டதால், வேரா, கான்யுஸை விட்டு பிரிந்தார்.

இது குறித்து கான்யுஸ் அடிக்கடி வேராவுடன் வாக்குவாதம் செய்து வந்தார். ஒரு முறை இவர்கள் இருவரின் வாக்குவாதம் மோதலாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த கான்யுஸ், வேராவை பாலியல் ரீதியாக தாக்கினார்.

அதன் பிறகு அவரை சுமார் 111 முறை கத்தியால் குத்தினார். அதிலும் ஆத்திரம் அடங்காத கான்யுஸ், வேராவை சுமார் 3.5 மணி நேரம் சித்திரவதை செய்தார். பின் இரும்பு வயரால் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

வேராவின் பரிதாப அலறலை கேட்ட அக்கம்பத்தினர், காவல்துறைக்கு 7 முறை தகவல் அளித்தனர். ஆனால், காவல்துறையினர் உடனடியாக வரவில்லை.

இறுதியில் கான்யுஸின் இரக்கமற்ற தாக்குதலில் வேரா உயிரிழந்தார்.

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளி கான்யுஸிற்கு, நீதிமன்றம் 17 வருட சிறைதண்டனை வழங்கியது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், வேராவின் தாயார் ஒக்ஸானா (Oksana), கான்யுஸ் துப்பாக்கி ஒன்றை ஏந்தியபடி ராணுவ உடையில் நிற்கும் புகைப்படம் ஒன்றை கண்டு அதிர்ச்சியடைந்தார். சிறையில் இருந்தவர், ராணுவ உடையில் காட்சியளிப்பது குறித்து ஒக்ஸானா விசாரணை நடத்தி தகவல்களை திரட்டினார்.

ரஷியா, கடந்த 2022 பிப்ரவரி மாதம், அண்டை நாடான உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு நடத்தியது. இதனை எதிர்த்து உக்ரைன் ரஷியாவுடன் போர் புரிந்து வருகிறது.

போர் 1.5 வருடங்களாக நீள்வதால், ரஷியாவிற்கு ராணுவத்தில் பணியாற்ற பல இளைஞர்கள் தேவைப்படுகின்றனர். எனவே சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பல இள வயதினரை ராணுவத்தில் சேர்க்க ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்படி கான்யுஸ் செய்த குற்றங்கள், அதிபரின் "சிறப்பு அதிகாரம்" மூலம், புதினால் மன்னிக்கப்பட்டு, ராணுவத்தில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து மிகுந்த ஆத்திரத்துடனும், சோகத்துடனும் ஒக்ஸானா கருத்து தெரிவித்தார்.

"நான் மிகுந்த மன உறுதி உள்ள பெண். ஆனால், இந்த செய்தி என்னை நிலைதடுமாற செய்து விட்டது. என் மகள் கல்லறையில் இனி நிம்மதியாக உறங்க முடியுமா? எல்லாமே என்னை விட்டு போய் விட்டது. ஒரு கொடூர கொலைகாரனை எப்படி வெளியே விட்டார்கள்? கொலகாரன் எதற்கு ரஷியாவை பாதுகாக்க வேண்டும்? அவன் மனிதனே அல்ல. பழி வாங்க எங்களை எப்போது வேண்டுமானாலும் அவன் மீண்டும் கொல்லலாம்" என ஒக்சானா கூறினார்.

"ரஷிய சிறையில் உள்ள கைதிகள் தங்கள் குற்ற நடத்தைக்காக வருந்தும் விதமாகத்தான் போர்க்களத்திற்கு அனுப்பப்படுகின்றனர்" என அரசின் செயலை நியாயப்படுத்தும் விதமாக ரஷிய பாராளுமன்ற செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov) தெரிவித்தார்.
 

Leave a Reply