• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இஸ்ரேல் படையினருடன் ஹமாஸ் அமைப்பு கடும் சண்டை- 12 ஆயிரம் பேர் மருத்துவமனையை விட்டு வெளியேற உத்தரவு

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் சண்டை 3 வாரங்களை தாண்டி நீடித்து வருகிறது.இந்த போரில் இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,400 பேர் பலியானார்கள்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில் காசாவில் 3,324 குழந்தைகள் உள்பட 8ஆயிரம் பேர் உயிர் இழந்து விட்டனர்.குண்டு வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் காசாவில் பல கட்டிடங்கள் உருக்குலைந்து விட்டது.

இதுவரை வான் மற்றும் கடல் வழியாக குண்டுகளை வீசி வந்த இஸ்ரேல் ராணுவ படையினர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தரை வழி தாக்குதலையும் நடத்தி வருகின்றது. காசாவை முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல் படையினர் பீரங்கி வண்டிகளுடன் நகருக்குள் ஊடுருவி கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹமாஸ் அமைப்பினர் காசாவில் உள்ள சுரங்க பதுங்கு குழிக்குள் உள்ளனர். இந்த இலக்குகளை குறி வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 450-க்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பினரின் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த தொடர் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாக தெரிகிறது. இஸ்ரேல் படைகளை எதிர்த்து ஹமாஸ் படையினரும் போரிட்டு வருகின்றனர். அவர்கள் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

வடமேற்கு காசா பகுதியில் எங்கள் போராளிகள் இஸ்ரேல் படையுடன் எந்திர துப்பாக்கி மற்றும் பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் மூலம் எதிர் தாக்குதல் நடத்தி வருவதாக ஹமாஸ் படை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் காசாவில் உள்ள மிகப்பெரிய ஆஸ்பத்திரியில் ஹமாஸ் படையினர் தங்களின் ரகசிய தளம் அமைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது. இது தொடர்பான சில புகைப்படங்களையும் இஸ்ரேல் வெளியிட்டது. இந்த ஆஸ்பத்திரியில் தான் உயிருக்கு பயந்து 12 ஆயிரம் பொதுமக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதனால் இந்த ஆஸ்பத்திரி அருகே உள்ள ஹமாஸ் இலக்குகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் போர் விமானங்கள் இங்கு தொடர்ந்து குண்டுகளை வீசி வருவதால் ஆஸ்பத்திரியில் பதுங்கி இருக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

போர் தீவிரம் அடைந்துள்ளதால் 12 ஆயிரம் பேரையும் உடனடியாக ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறும்படி உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
 

Leave a Reply