ஹமாஸ் தலைவர்களை ரஷ்யாவுக்கு வரவேற்ற புடின்
ஹமாஸ் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி, ஏராளமானோரை கொன்று, பிணைக்கைதிகளை பிடித்துவைத்துள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பின் தலைவர்களை ரஷ்ய ஜனாதிபதி புடின் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு வரவேற்றுள்ள விடயம் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று, ஹமாஸ் அமைப்பின் மூத்த தளபதிகள் சிலர் மாஸ்கோவுக்கு வரவேற்கப்பட்டனர். அத்துடன், அவர்களை ஆதரிக்கும் ஈரான் துணை வெளியுறவு அமைச்சரான Ali Baghiri Kaniயும் மாஸ்கோ சென்றுள்ளார்.
ரஷ்ய குடிமக்கள் உட்பட வெளிநாட்டு பிணைக்கைதிகளைவிடுவிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காகவே அவர்கள் அனைவரும் ரஷ்யா வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான Lioir Hiat, இந்த சந்திப்பை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர்கள் மாஸ்கோவிற்கு வரவேற்கப்பட்டுள்ள விடயத்தை, தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் மற்றும், ஹமாஸ் தீவிரவாதிகளின் செயலை நியாயப்படுத்தும் ஒழுக்கக்கேடான நடவடிக்கையாக இஸ்ரேல் பார்க்கிறது என்று கூறியுள்ளார் அவர்.
இதற்கிடையில், பாலஸ்தீனத்தில் பேரணிகளில் பங்கேற்றோர், புடின் மற்றும் கிம் ஜாங் உன்னின் படங்களை கையில் ஏந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஆக, ரஷ்யா, ஈரான் ஆதரவுடன் செயல்படும் ஹமாஸுடன், ஈரானுடைய மத்தியஸ்தத்தின் பேரில் மோசமான கூட்டணி ஒன்றை உருவாக்குவதாக மேற்கத்திய நாடுகளில் அச்சம் உருவாகியுள்ளதை மறுப்பதற்கில்லை.