காசாவில் சுகாதார பணியாளர்கள் உடனான தொடர்பை இழந்து விட்டோம்- WHO தலைவர் சொல்கிறார்
ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது கடுமையான முறையில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
வான்தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதற்கு முன்னோட்டமாக சில தினங்களாக பீரங்கிகள் மூலமாக காசாவில் சிறுசிறு தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலால் காசாவில் உள்ள சுமார் 20 லட்சம் மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு, மருத்துவ உதவிப்பொருட்கள் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.
போர் நிறுத்தத்திற்கு ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்த நிலையில், காசாவில் பணியாற்றி வந்த உலக சுகாதார மையத்தின் அதிகாரிகள் (Staff), சுகாதார பணியாளர்கள், மனிதாபிமான உதவிகள் செய்யும் பார்ட்னர்கள் ஆகியோர் உடனான தொடர்பை இழந்துவிட்டோம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
காசாவில் உள்ள அனைத்து மக்களையும் உடனடியாக பாதுகாக்க வேண்டும். முழு மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்பெற செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல் யுனிசெப் தலைவர் ரஸல், "எங்களுடன் பணிபுரியம் சக அதிகாரிகள் உடனான தொடர்பை இழந்து விட்டோம். அவர்கள் பாதுகாப்பு விசயம் எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.