• Welcome to TamilsGuide
செய்திகள் 1

என்.ஜி.ஓ. சட்ட வரைவிற்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம் - மேலதிக செயலாளரிடம் மகஜர் கையளிப்பு

இலங்கை

அரசாங்கத்தால் 2026 ஆம் ஆண்டு கொண்டுவரப்படவுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்ட வரைவிற்கு (L.D.-0.6/2026) எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (17) காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட குடிமைச் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் காலை 10.00 மணியளவில் ஆரம்பமான இப்போராட்டத்தில், உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் கிராம மட்டத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், சனசமூக நிலையங்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விவசாயச் சங்கங்கள் போன்ற அடிமட்ட அமைப்புகள் கிராமப்புறப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுவரும் நிலையில், புதிய சட்ட வரைவு நடைமுறைக்கு வந்தால் அவர்களின் சுயாதீனச் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை வெளியிட்டனர்.

அத்துடன், நாட்டின் அரச மொழிகளான தமிழ் மற்றும் சிங்களத்தில் வெளியிடப்படாமல் ஆங்கிலத்தில் மட்டும் தயாரிக்கப்பட்டுள்ள இந்தச் சட்ட வரைவை அவசர அவசரமாகக் கொண்டுவர முயல்வது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அனர்த்தக் காலங்களில் கிராம உத்தியோகத்தர்களுடன் இணைந்து பணியாற்றும் பொது அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு இச்சட்டம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனச் சுட்டிக்காட்டிய அவர்கள், போராட்டத்தின் நிறைவில் நீதி அமைச்சுக்கான கோரிக்கை மகஜரை முல்லைத்தீவு மாவட்ட மேலதிகச் செயலாளர் (காணி) ச.மஞ்சுளாதேவியிடம் கையளித்தனர்.

Leave a Reply